ஜெகத்ரட்சகன் மீதான வழக்குகள் ரத்து

முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி தி..முக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன், கடந்த 1995ல் குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை வாங்கியது தொடர்பாக குவிட்டன்தாசன் என்பவரின் புகார் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும் ஜெகத்ரட்சகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், வழக்கை ரத்து செய்யக் கோரிய ஜெகத்ரட்சகன் மனுவை ஏற்றுக்கொண்டு அவர் மீதான இரு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார். முன்னதாக இதேபோல, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி வருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்த விவகாரத்தில், பணத்தை திருப்பித் தந்து பிரச்சனையை சுமூகமாக தீர்த்துக்கொண்டதாக கூறியதால் அவர் மீதான வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த தீர்ப்பு கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. தற்போது அவ்வழக்கை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.