அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

தி.மு.க நிர்வாகி சைதை சாதிக் என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த தி.மு.க நிகழ்ச்சியில் பா.ஜ.க தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் குஷ்புகுறித்து ஆபாசமாக பேசினார். மேலும் பா.ஜ.கவிலுள்ள நடிகைகள் நமீதா, காயத்ரி ரகுராமன், கௌதமி ஆகியவர்கள் குறித்தும் தகாத வார்த்தையில் பேசி விமர்சனம் செய்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை தமிழக முதல்வரும் தி.மு.க தலைவருமான ஸ்டாலின் இதுவரை அவரை கட்சியை விட்டு நீக்கவில்லை. இரண்டாம் கட்டத் தலைவர்கள் சைதை சாதிக்கை வெறும் கண்டித்ததோடு இதனை நிறுத்திக்கொண்டனர். எனினும், சைதை சாதிக் மீது கொடுக்கப்பட்ட புகார்களையடுத்து அவர் மீது காவல்துறையினர் வழக்கு மட்டும் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், சைதை சாதிக் பேச்சை கண்டித்து பா.ஜ.க மகளிரணி சார்பில் சென்னை வள்ளூவர் கோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். இந்த ஆர்ப்பாட்டம் அனுமதியின்றி நடைபெற்றதாகக்கூறி, அண்ணாமலை மற்றும் பா.ஜ.க மகளிரணி நிவாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். அண்ணாமலை மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், 370 பா.ஜ.கவினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.