ஆதார் இணைப்புக்கு எதிராக வழக்கு

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரிய மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் இன்றைய தினத்துக்கு தள்ளி வைத்துள்ளது. மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் 6ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதனை ரத்து செய்யக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செயதார். அதில், “ஆதார் இணைப்பை ஒரு வீட்டுக்கு மட்டுமே மேற்கொள்ள முடியும். வாடகைக்கு குடியிருப்போர் தங்கள் ஆதார் எண்ணை இணைத்துவிட்டால், அவர்கள் காலி செய்த பிறகு அங்கு புதிதாக வாடகைக்கு வருவோரின் ஆதார் இணைப்பை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படும். தமிழக அரசு, ஆதார் சட்டப்படி, ஆதார் எண்ணுக்கு பதில் பயன்படுத்தக் கூடிய வேறு ஆவணங்களைப் பற்றிய அறிவிப்பை வெளியிடவில்லை. ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மின்சார மானியம் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மானியம் பெற ஆதாரை கட்டாயமாக்குவதாக இருந்தால் அதற்கு மாநில தொகுப்பு நிதியத்தில் இருந்து நிதி வழங்க வேண்டும். ஆனால், சட்டத்தில் அதற்கு எந்த விதிகளும் வழிவகையும் செய்யவில்லை. மானியம் பெற ஆதாரை கட்டாயமாக்குவதாக இருந்தால் அதற்கு மாநில தொகுப்பு நிதியத்தில் இருந்து நிதி வழங்க வேண்டும். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு என்பது சமூக நல திட்ட பயன்களை பெறுவதில் பாரபட்சத்தை ஏற்படுத்தும். எனவே, மின் கட்டண மானியம் பெற ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது, ஆதார் இணைப்பை கட்டாயமாக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என உத்தரவிட வேண்டும்” என கோரியுள்ளார்.