அவர்களுக்கு காளைகளும் குடும்ப உறுப்பினர் தான்

உச்ச நீதிமன்றத்தில், ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு விசாரணை நேற்று 3வது நாளாக நடைபெற்றது. இதில் பீட்டா அமைப்பு சார்பில் ஆஜரான வக்கீல் சியாம் திவான், ‘பாரம்பரிய காளை இனங்களை காப்பாற்றுவதற்காக தான் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஜல்லிக்கட்டு காளைகளுக்கு இழைக்கப்படும் கொடூரம்’ என்றார். இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், “இந்த நீதிமன்றம் முன்னர் ஜல்லிக்கட்டில் இருக்கும் நடைமுறைகளை கொடூரம் என்றதே தவிர, ஜல்லிக்கட்டு விளையாட்டே கொடூரமானது என கூறவில்லை. தற்போது ஜல்லிக்கட்டுக்கென சட்டம் உள்ளது. வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாய்கிறது. மேலும் தற்போது மனுதாரர் தரப்பு பல்வேறு விதிமீறல் அறிக்கைகளை சமர்பிக்கிறீர்கள். இவை, விதிமுறைகளை அமல்படுத்துவதில் ஏற்பட்ட தவறு மட்டுமே. ஜல்லிக்கட்டு காளைகள் என்பது திடீரென இந்த விளையாட்டில் பயன்படுத்தப்படுவதில்லை அதற்கான முறையான பயிற்சிகள் அவைகளுக்கு வழங்கப்பட்டு தனியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. நாய்களுக்கான போட்டிகள் கூட நடத்தப்படுகிறது. அதை துன்புறுத்தலாக நாம் எடுத்துக் கொள்ள முடியுமா? இதற்காக நாய்களுக்கு பயிற்சி வழங்கப்பட்ட பிறகு அவை தானே பயன்படுத்தப்படுகின்றன? போட்டிகளில் பயன்படுத்தப்படும் விலங்குகளின் கண்களில் மிளகாய் பொடி தூவுதல் போன்ற செயல்பாடுகள் தான் விலங்குகள் துன்புறுத்தலாக இருக்க முடியும். காளைகளுக்கு கொடுமை இழைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. 1,000 ஆண்டுகளாக காளைகளை வைத்து இத்தகைய போட்டிகள் நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தனியாக பயிற்சி அளிப்பதோடு, அந்த காளைகளை தங்கள் சொந்த குடும்ப உறுப்பினராகவே மக்கள் பாவிக்கின்றனர். தற்போது அவ்வாறான எந்த விதிமீறலும் நடைபெறுவதாக தெரியவில்லை. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் விதிகளை அமல்படுத்த வேண்டும் என்பதே முக்கியம். ஜல்லிக்கட்டு நடைமுறையை மாற்ற வேண்டும் என்பது அல்ல” என்று கூறினார்கள்.