தென்னரசுவிற்கு பா.ஜ.க ஆதரவு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி தரப்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் தென்னரசை ஆதரித்து 2,501 பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். இதுதொடர்பான ஆவணங்களை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் அ.தி.மு.க அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தாக்கல் செய்தார். தங்கள் தரப்பில் மனுதாக்கல் செய்த வேட்பாளர் செந்தில் முருகன் வேட்புமனுவை வாபஸ் வாங்குவார் என்று பன்னீர் செலவம் தரப்பு அறிவித்திருந்தது. இந்த சூழலில், தென்னரசுவிற்கு முழு ஆதரவை வழங்குவதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் கே.எஸ் தென்னரசுவிற்கு பா.ஜ.க தனது முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சட்டபூர்வ அ.தி.மு.க வேட்பாளரை நிறுத்தியுள்ள இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், பொது நலன் கருதி, கூட்டணியின் நன்மை கருதி தங்களின் வேட்பாளரை வாபஸ் பெற்றிருக்கும் ஓ. பன்னீர் செல்வதத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஆளும் கட்சியின் அராஜகங்களை, ஊழல்களை, அத்துமீறல்களை, மக்கள் விரோத போக்கை, கொடுத்த வாக்கில் எதையும் நிறைவேற்ற முடியாமல் தினறிக்கொண்டிருக்கும் திறனற்ற தி.மு.க அரசை வீழ்த்துவதற்காக ஓர் அணியில் திரண்டிருக்கும் நாம் அனைவரும் தென்னரசுவின் வெற்றிக்கு பாடுபட வேண்டும். பா.ஜ.க கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் கூட்டணியின் வெற்றிக்காக கடுமையாக பாடுபட வேண்டும். இந்த இடைத்தேர்தல் வெற்றி, வருங்கால தேர்தல் வெற்றிகளுக்கு வரவேற்பு கூறும் வண்ணம் அமைக்க, கண்ணுறக்கம் இல்லாமல் உழைக்க வேண்டியிருக்கும். ஆட்சி அதிகாரத்தின் பலம், அளவின்றி குவிந்திருக்கும் பணபலம் என்று எத்தனை எதிரிகள் வந்தாலும் மக்கள் பலத்துடன் நம் மனதார உழைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.