பா.ஜ.க.,வினர் காரை வழிமறித்து தி.மு.க.,வினர் கடும் தாக்குதல்

பாவூர்சத்திரத்தில் பா.ஜ., நிர்வாகிகளை தாக்கி, அவர்களின் காரை சேதப்படுத்தி, கார் கண்ணாடியை, தி.மு.க.,வினர் உடைத்தனர். ஆனால், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. தமிழகத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவை, தி.மு.க.,வினர் கொண்டாடி வருகின்றனர். தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில், தி.மு.க., சார்பில் நேற்று முன்தினம் இரவு நுாற்றாண்டு விழா நடந்தது. விழா முடிந்து, சாலை அருகே கட்சியினர் வந்த போது, திருநெல்வேலியில் இருந்து குற்றாலத்திற்கு காரில் சென்ற பா.ஜ., நிர்வாகிகள், ‘பாரத் மாதா கி ஜே’ என கோஷமிட்டனர். ஆத்திரம் அடைந்த தி.மு.க.,வினர், காரை நிறுத்தி, பா.ஜ., நிர்வாகி களை தாக்கியதுடன், காரின் முன்பக்க கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தினர். அங்கிருந்த போலீசார், அவர்களை மீட்டு பாதுகாப்பாக அனுப்பினர். ஆனால் இது குறித்து வழக்குப்பதிவு செய்யவில்லை.