தமிழகத்தில் பா.ஜ.க மலர்ந்தே தீரும்

கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில், பா.ஜ.க மாவட்ட தலைமை அலுவலகத்தை பா.ஜ.கவின் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா திறந்துவைத்தார். இதைத் தொடர்ந்து 75 அடி உயரமுள்ள கம்பத்தில் பா.ஜ.க கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் காணொலியில் தருமபுரி, நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்ட பா.ஜ.க கட்சி அலுவலகங்களையும் நட்டா திறந்தார். இதனை தொடர்ந்து பேசிய அவர், “நாட்டில் மாநில கட்சிகள் எல்லாம் தற்போது குடும்ப கட்சிகளாக மாறிவிட்டன. தமிழகம், தெலங்கானா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, பீகார், மேற்கு வங்கம், ஒடிசா, காஷ்மீர் போன்ற மாநிலங்களில் வாரிசு அரசியல் நடைபெற்று வருகிறது. காங்கிரஸின் மோசமான ஆட்சியின் காரணமாகவே இந்த மாநில கட்சிகள் தோன்றின. ஆனால் அவற்றில் பல கட்சிகள், அதே காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் இத்தகைய குடும்ப கட்சிகளுக்கு எதிராக பா.ஜ.க போராடி வருகிறது. தமிழகத்திலும் தி.மு.கவில் வாரிசு அரசியல் நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின், தனது மகனுக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளார். அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. தி.மு.கவிற்கு, தமிழக மக்கள் மீது அக்கறை இல்லை தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை பா.ஜ.கவால் மட்டுமே தர முடியும். தமிழகத்தில் பா.ஜ.க விரைவில் மலர்ந்தே தீரும்” என கூறினார்.