உலக முக்கியத்துவம் வாய்ந்த கட்சி பா.ஜ.க

வால் ஸ்டிரீட் ஜர்னல் என்ற அமெரிக்க பத்திரிகையில் வால்டர் ரச்செல் மீட் என்பவர் எழுதிய கட்டுரையில், “பாரதத்தில் ஆளும் கட்சியாக உள்ள பா.ஜ.க., அமெரிக்காவின் தேசிய நலன்களின் அடிப்படையில் பார்க்கும்போது, உலக அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாக உள்ளது. எனினும், அக்கட்சி குறைவாகவே புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் தொடர் வெற்றி பெற்ற பா.ஜ.க. அடுத்து 2024ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றியை திரும்ப பெறும் முனைப்பில் உள்ளது. அக்கட்சியின் ஆட்சியில், ஒரு முன்னணி பொருளாதார சக்தி படைத்த நாடாக பாரதம் வெளிப்பட்டு வருவதுடன், இந்தோ பசிபிக் பிராந்திய பகுதியில் அமெரிக்காவின் செயல் திட்டத்திற்கு உறுதுணையாக ஜப்பானுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறது. வளர்ந்து வரும் சீனாவின் ஆற்றலை சமன்படுத்தும் வகையிலான அமெரிக்காவின் முயற்சிகளுக்கு, பா.ஜ.கவின் உதவி அவசியம். அதன் உதவியின்றி இத்திட்டம் செயல்படுவது பலன் தராது. பாரதியர்கள் அல்லாத பலரும், அரசியல் மற்றும் கலாசாரத்தில் வளர்ந்து வரும் அதன் வரலாறு பற்றி அறிந்திருக்கவில்லை. பா.ஜ.கவானது நவீனத்துவத்தின் முக்கிய விஷயங்களை ஏற்றுக்கொள்ளும் போதிலும், மேற்கத்திய தாராளவாத விஷயங்கள் மற்றும் முன்னுரிமைகளை புறந்தள்ளுகிறது. சீன கம்யூனிஸ்டு கட்சியை போன்று, 100 கோடிக்கும் மேற்பட்ட மக்களை கொண்ட பாரதத்தை வழிநடத்தி சென்று உலகளாவிய ஆற்றல் மிக்க நாடாக அதனை மாற்றுவதற்கு பா.ஜ.க நம்பிக்கை கொண்டுள்ளது. இஸ்ரேலின் லிகுட் கட்சியை போன்றே பாரம்பரிய மதிப்புகளுடன் கூடிய, வர்த்தக சந்தைக்கு ஆதரவான பொருளாதார நிலைப்பாட்டை பா.ஜ.க செயல்படுத்தி வருகிறது. ஆனால், அமெரிக்க நிபுணர்கள், அதிலும் இடதுசாரி தாராளவாத எண்ணம் கொண்டவர்கள் எல்லாம், பிரதமர் மோடியின் பாரதத்தை, டென்மார்க்கை போல் ஏன் நீங்கள் இல்லை? என கேள்வி கேட்கிறார்கள். எனினும், பாரதம் இயற்கையிலேயே ஒரு சிக்கல் நிறைந்த பகுதி. அதில் வேறு சில விஷயங்களும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளன. கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் வடகிழக்கு பாரதத்தில், பா.ஜ.கவின் சமீபத்திய, குறிப்பிடத்தக்க அரசியல் வெற்றிகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 20 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தரப் பிரதேசத்தில். பா.ஜ.க. அரசு, ஷியா பிரிவு முஸ்லிம்களின் வலிமையான ஆதரவை பெற்று திகழ்கிறது. ஜாதி வேற்றுமைக்கு எதிராக போராடுவதற்கான முயற்சிகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர்களுடனான எனது தொடர் சந்திப்புகளுக்குப் பின்னர், அவர்களது சில விமர்சனங்களுக்கு பின்பு, அமெரிக்கர்கள் மற்றும் மேற்கத்திய நாட்டினர் பொதுவாக, ஒரு சிக்கலான மற்றும் சக்தி வாய்ந்த அந்த இயக்கம் பற்றி புரிந்து கொள்ள முன்வர வேண்டும் என என்னை நானே சமரசப்படுத்தி கொண்டேன்” என தெரிவித்துள்ளார்.