பா.ஜ.க. அமோக வெற்றி

அருணாச்சல பிரதேச மாநில தேர்தல் ஆணையம் ஜூன் 14ம் தேதி 130 கிராம பஞ்சாயத்து உறுப்பினர் இடங்களுக்கும் ஒரு மாவட்ட கவுன்சிலர் இடத்திற்கும் இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதில், 116 கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவ்வகையில் இந்த தேர்தலில் பா.ஜ.க. 101 இடங்களையும், தேசிய மக்கள் கட்சி மற்றும் காங்கிரஸ் தலா 2 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 10 இடங்களையும் போட்டியின்றி வென்றனர். ஜூலை 12ம் தேதி ஒரு மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் இடத்துக்கும், 14 கிராம பஞ்சாயத்து உறுப்பினர் இடங்களுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், பா.ஜ.க 7 இடங்களில் வெற்றிபெற்றது. இதன் மூலம் அருணாச்சல பிரதேச கிராம பஞ்சாயத்துத் தேர்தலில் ஆளும் பா.ஜ.க. 108 கிராம பஞ்சாயத்து இடங்களை வென்று அமோக வெற்றி பெற்றுள்ளது. தேசிய மக்கள் கட்சி 5 இடங்களையும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (யுனைடெட்) தலா 3 இடங்களையும், சுயேட்சைகள் 11 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர். ஒரு மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் இடத்திற்கான தேர்தல் சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் பிற நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல, மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கான வாக்குபதிவு எண்ணிக்கையில் மொத்தமுள்ள 17 இடங்களில் பா.ஜ.க. கூட்டணி 12 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றிபெற்றது. காங்கிரஸ் கூட்டணி 5 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.