உலகின் குருவாகும் பாரதம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் சுற்றுப்பயணமாக ராமநாதபுரம் சென்றிருந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இரண்டாவது நாளில் எட்டிவயல் கிராமத்தில் உள்ள விவசாயி தரணி முருகேசனின் இயற்கை வேளாண்மை பண்ணைக்குச் சென்றார். அங்கு சாகுபடி செய்திருந்த பயிர்கள், அறுவடை செய்த காய்கறிகள், நாட்டு மாட்டுப் பண்ணை ஆகியவற்றைப் பார்வையிட்டார். பின்னர் விவசாயிகளுடன் கலந்துரையாடிய அவர், “இயற்கை விவசாயத்தில் ஆர்கானிக் விவசாயம், இயற்கை விவசாயம் என இரு வகைகள் உண்டு. ஆர்கானிக் விவசாயம் உரம், பூச்சி மருந்தின்றி இயற்கை உரங்களைக் கொண்டு செய்வது. இயற்கை விவசாயம் என்பது சூழலுக்கு ஏற்ப அங்குள்ள பயிர்களை உருவாக்கி விவசாயம் செய்வது. இந்த விவசாய முறைகளை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டும். குறைந்த நீரில் உற்பத்தியாகும் சிறு தானியப் பயிர்களை அதிகம் உற்பத்தி செய்ய வேண்டும். சிறு தானியங்களில் அதிகச் சத்து உள்ளது. பாரதத்தின் முயற்சியால் ஐ.நாவால் இந்த ஆண்டு சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டு  உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. உலகில் பாரதம் வளர்ந்த நாடாக மாறிக் கொண்டு வருகிறது. பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம் போன்ற வளர்ந்த நாடுகள், தங்களது வளர்ச்சியை யுத்தத்துக்குப் பயன்படுத்தின. ஆனால், பாரதம் தனது வளர்ச்சியை உதவி செய்ய பயன்படுத்துகிறது. உலகுக்கு உதவும் நாடாக பாரதம் மாறிக் கொண்டிருக்கிறது. உலக நாடுகளில் கொரோனாவுக்கு நமது தேசத்தின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த மருந்து மிகவும் உயர்வானது. அதனை பல ஏழை நாடுகளுக்கு இலவசமாக வழங்கி நாம் தொண்டு செய்தோம். அதனால், உலகத்தின் குருவாக பாரதம் உருவாகும். அதற்கு வெகுதொலைவு இல்லை. 2047ல் உலகில் வளர்ந்த நாடாக பாரதத்தை மாற்ற பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்” என கூறினார். அதைத் தொடர்ந்து திருஉத்தரகோசமங்கை கோயிலுக்குச் சென்ற ஆளுநரை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் தலைமையில் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். தொடர்ந்து சுவாமி, அம்மன் மற்றும் மரகத நடராஜரை ஆளுநர் தரிசனம் செய்தார். ராமநாதபுரம் அரசு விருந்தினர் மாளிகையில் ஆளுநரை பல இளம் தொழில் முனைவோர், மீனவர் சங்கப் பிரதிநிதிகள், பல்வேறு சமுதாயப் பிரதிநிதிகள் சந்தித்து பேசினர், கோரிக்கை மனுக்களை அளித்தனர். வைகைப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் எம்.எஸ்.கே. பாக்கியநாதன், கடந்த 4 மாதங்களாக பயிர் காப்பீடு இழப்பீடும் நிவாரணமும் அரசு வழங்கவில்லை என மனு அளித்தார்.