பி.எப்.ஐ அமைப்பினர் வீடுகளில் சோதனை

கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன் நெட்டார். பா.ஜ.க பிரமுகரான இவரை சில முஸ்லிம் மத அடிப்படைவாத பயங்கரவாதிகள் சில மாதங்களுக்கு முன்பு படுகொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகளை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் இவ்வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் சமீபத்தில் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா(பி.எப்.ஐ.) அமைப்பினருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பி.எப்.ஐ அமைப்பை சேர்ந்த முகமது முஸ்தபா, உமர் பாருக், அபூபக்கர் சித்திக் மற்றும் தவ்பால் ஆகியோருக்கு, பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் தொடர்பு இருப்பதை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். தலைமறைவாக உள்ள அவர்களை பிடிக்க துப்பு கொடுத்தால் ரூ. 14 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மங்களூரு, உடுப்பி, தார்வார், உப்பினங்கடி, சுள்ளியா, மைசூரு, உப்பள்ளி உள்பட கர்நாடகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பி.எப்.ஐ அமைப்பினர் மற்றும் அந்த அமைப்பின் அரசியல் முகமான எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த தலைவர்களின் வீடுகள், அலுவலகங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளரான ஷபி பெல்லாரே, கிராம பஞ்சாயத்து உறுப்பினர் இக்பால் பெல்லாரே, சுள்ளியா பகுதியைச் சேர்ந்த இப்ராகிம் ஷா ஆகிய 3 சந்தேக நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் இவர்களுடன் சேர்த்து இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகி இஸ்மாயில் நலபந்த் என்பவரின் வீட்டில் இருந்து பிரவீன் நெட்டார் கொலை செய்யப்பட்டது தொடர்பான முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் கருவிகளையும் கைப்பற்றினர். பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், கொலைக்கு சதித்திட்டம் தீட்டியதாக கிடைத்த தகவலின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.