ரூ.2000 திரும்ப பெறுவதால் ஏற்படும் நன்மைகள்

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள ரூ.2000 நோட்டுகள் திரும்பப் பெறும் நடவடிக்கையால் ஏற்படும் நண்மைகள்: ‘வங்கிகளில் டெபாசிட்டுகள் அதிகரிக்கும், கடன்கள் திருப்பி செலுத்தப்படுவது அதிகரிக்கும், நுகர்வு அதிகரிக்கும், ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் ரூபாய்க்கு வேகம் கிடைக்கும், ஜிடிபி உயருவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது,’ என ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ) நடத்திய ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக சமீபத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி, மக்கள் தங்கள் வசம் உள்ள ரூ.2000 நோட்டுகளை மாற்ற செப்டம்பர் 30ம் தேதி வரை, ரிசர்வ் வங்கி அவகாசம் வழங்கியுள்ளது. ரிசர்வ் வங்கி தரப்பில் சமீபத்தில் வெளியான புள்ளிவிவரங்களின்படி, மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.3.62 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகளில், ரூ.1.8 லட்சம் கோடி (கிட்டத்தட்ட 50 சதவீதம்) மதிப்பிலான நோட்டுகள் திரும்ப வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் 85 சதவீத பணம் டெபாசிட் வகையில் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ), ரூ.2000 நோட்டுகள் திரும்பப்பெறுவது தொடர்பாக நடத்திய ஆய்வறிக்கையில், ‘2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதால் வங்கிகளில் டெபாசிட்டுகள் அதிகரிக்கும், கடன்கள் திருப்பி செலுத்தப்படுவது அதிகரிக்கும், நுகர்வு அதிகரிக்கும், ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் ரூபாய்க்கு வேகம் கிடைக்கும், ஜிடிபி உயருவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது’ என தெரிவித்துள்ளது. ரூ.2000 நோட்டுகள் உயர் மதிப்புடையது என்பதால், டிஜிட்டல் ரூபாய்க்கு மாறுவது எளிதாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.