திருப்பூரில் வங்கதேசத்தவர் கைது

திருப்பூர், அம்மாபாளையம் ராக்கியா பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன், தன் வீட்டை கடந்த ஏப்ரலில் ஷிமுல் காஜி என்பவருக்கு வாடகைக்கு விட்டார். ஆதார் கார்டில் ஈரோடு மாவட்ட முகவரி இருந்தது. ஆனால், அவர் வங்க தேசத்தவர் என பின்னர் தெரிய வந்தது. அது குறித்து, ஷிமுல் காஜியிடம் கேட்டபோது, அவருடன் சேர்ந்து, அவரது நண்பர்கள் சைபுல் இஸ்லாம், மன்னன் மோலல் ஆகியோரும் சேர்ந்து மணிகண்டனை தாக்கியுள்ளனர். இது குறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் மூவரையும் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் மூவரும் வங்க தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தமிழகத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருப்பதும் தெரிய வந்தது. கொலை மிரட்டல், சட்டவிரோத குடியேற்றம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் வழக்கு பதிந்து, மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் பயங்கரவாதிகளா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.