தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர் கடிதம்

வழக்கறிஞர் வினீத் ஜிண்டால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,  ‘கடந்த மே 31 அன்று குல்காம் மாவட்டத்தில் பள்ளி ஆசிரியை ரஜ்னி பாலா கொல்லப்பட்டது கடந்த மாதத்தில் நடந்த ஏழாவது தாக்குதல். பயங்கரவாதிகளால் அண்மைக் காலமாக இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களில் மூன்று காவல் அதிகாரிகள் மற்றும் மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக, காஷ்மீரில் ஹிந்துக்களைக் குறிவைத்து படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. எனவே, காஷ்மீரில் உள்ள ஹிந்து சிறுபான்மையினருக்கு உடனடியாக போதிய பாதுகாப்பை வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். காஷ்மீரில் சிறுபான்மை குழுக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அமைப்பை உருவாக்கி செயல்படுத்த ஒரு சிறப்பு பிரிவு அமைக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட ஹிந்து குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வகையான இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகள் காஷ்மீரில் வசிக்கும் ஹிந்துக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் முயற்சி மட்டுமல்ல, நாட்டில் போர் மற்றும் அமைதியின்மையை ஏற்படுத்தும் முயற்சியாகும். சமீபகால தாக்குதல்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஹிந்து சமூகத்தினரிடையே அச்சம், பாதுகாப்பின்மை உணர்வை உருவாக்கியுள்ளது. இந்த விவகாரம் குறித்து என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியுள்ளார்.