பா.ஜ.க மாவட்டத் தலைவரை கொல்ல முயற்சி

ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டவர் தரணி முருகேசன். இவரது வீடு ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் உள்ளது. ஓரிரு நாட்களுக்கும் முன் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தரணி முருகேசன், இரவு 9 மணியளவில் தனது வீட்டில் அமர்ந்து கட்சிக்காரர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் அணிந்தபடி வந்த இருவர், தரணி முருகேசனின் வீட்டிற்கு அருகில் நின்றுகொண்டிருந்த அவரது காரில் மோதினர். சத்தம் கேட்டு, தரணி முருகேசனின் மேலாளரான எல்.கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் உள்ளிட்ட சிலர், ஓடிவந்து பார்த்தனர். அப்போது, இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், முகக்கவசம் அணிந்த இருவரும் தாங்கள் வைத்திருந்த பெரிய அரிவாளை எடுத்து அவர்களை வெட்டினர். இதில், கணேசனுக்கு வெட்டு விழுந்தது. அவர் உட்னடியாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனிடையே, பா.ஜ.க.வினர் அந்த மர்ம நபர்களை பிடித்து கேணிக்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், பிடிபட்ட மர்ம நபர்கள், சென்னை எண்ணூரைச் சேர்ந்த மோகன், புதுவண்ணாரப்பேட்டை சுரேஷ் என்பதும், கூலிப்படையாகச் செயல்பட்டதும் ராமநாதபுரம் எம்.எஸ்.கே. நகரைச் சேர்ந்த விக்கி என்ற விக்னேஸ்வரன் அழைத்ததின் பேரில் தரணி முருகேசனை கொலை செய்ய இவர்கள் வந்ததும் தெரிய வந்தது. பா.ஜ.க. முன்னாள் மாவட்டத் தலைவர் கதிரவன், வழக்கறிஞர் சண்முகநாதன் ஆகியோர், தரணி முருகேசனை கொலை செய்ய இவர்களை கூலிப்படையாக அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பா.ஜ.க.வினர், அவர்கள் இருவரையும் கைது செய்ய வலியுறுத்தி, தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தையடுத்து, மோகன், சுரேஷ், விக்னேஸ்வரன், வழக்கறிஞர் சண்முகநாதன், கதிரவன், கதிரவனின் ஓட்டுநர் பாலமுருகன் என்ற சேட்டை பாலா ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மோகன், சுரேஷ், பாலமுருகன் ஆகியோரை கைது செய்தனர். விக்னேஸ்வரன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.