சீக்கிய இளைஞர் மீது தாக்குதல்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வரும் 21 வயதான சீக்கிய மாணவர் ககன்தீப் சிங், கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது வீட்டுக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பேருந்தில் இருந்த 10க்கும் மேற்பட்ட கனடா இளைஞர்கள், ககன்தீப் சிங் மீது ‘விக்’ உள்ளிட்டவற்றை வீசி தொல்லை செய்தனர். காவல்துறையில் புகார் அளிப்பேன் என ககன்தீப் சிங் எச்சரித்தும் அவர்கள் ககன்தீப் சிங்கை தொடர்ந்து துன்புறுத்தினர். ககன்தீப் சிங் பேருந்தில் இருந்து இறங்கினார். அவரை தொடர்ந்து அந்த இளைஞர்களும் இறங்கினர். பின்னர் ககன்தீப் சிங்கை சரமாரியாக தாக்கினர். அவரது தலைப்பாகையை பறித்தனர். தலை முடியை பிடித்து தரதரவென சாலையில் இழுத்து சென்றனர். இதனால் ககன்தீப் சிங்கின் கண், கை, கால்கள் உட்பட உடலின் பல பாகங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. பின்னர் அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய இளைஞர்களை தேடி வருகின்றனர். இது ஒரு இனவெறி தாக்குதல் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.