ஏ.டி.எம். கொள்ளையன் ஆசிப் ஜாவேத் கைது

கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி அதிகாலையில், திருவண்ணாமலை டவுன், போளூர், கலசப்பாக்கம் ஆகிய பகுதிகளிலுள்ள 4 ஏ.டி.எம். மையங்களை உடைத்து கொள்ளை நடந்தது. இது தமிழகத்தையே அதிர வைத்தது. மர்ம கும்பல் கேஸ் வெல்டிங் இயந்திரம் மூலம் ஏ.டி.எம். இயந்திரங்களை வெட்டி, அதிலிருந்த 72.80 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றது. இச்சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு பல மாநிலங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரனை நடைபெற்று வந்த நிலையில், இந்த கொள்ளை சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி மட்டும் சிக்கவில்லை. அவனை பிடிக்க காவல்துறையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தற்போது, ஹரியானா – ராஜஸ்தான் எல்லையான ஆரவல்லி பகுதியில் இந்த முக்கிய குற்றவாளி பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த இடத்திற்கு விரைந்து சென்ற காவலர்கள், அங்கு ஒரு வீட்டில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளியான ஆசிப் ஜாவேத்தை துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.