விவசாயிகள் வஞ்சிக்கப்படும் நேரத்தில் முதல்வருக்கு காங்கிரஸ் கட்சியுடன் விருந்து

தமிழக விவசாயிகள் கர்நாடக காங்கிரஸ் அரசால் வஞ்சிக்கப்படும் அதே நேரத்தில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியுடன் விருந்து உண்டு கொண்டிருக்கின்றனர் என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கர்நாடகா மாநில காங்கிரஸ் ஆட்சியாளர்கள், தமிழக விவசாயிகள் நலனுக்கு எதிராக மேகதாது அணையைக் கட்ட முயற்சிப்பது மற்றும் கடந்த சில மாதங்களாக, தமிழகத்துக்கான காவிரி நீர் பங்கீடைச் சரிவர வழங்காமல் கர்நாடக அரசு புறக்கணிப்பது ஆகியவற்றை நன்கு அறிந்திருந்தும், எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல், கொள்கையற்ற சுயநலக் கூட்டணிக்காக, தமிழக விவசாயிகள் நலனை புறக்கணிக்கும் திறனற்ற திமுக அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து, தமிழக பாஜக அனைத்து மாவட்டங்களிலும், ஊடக சந்திப்பு நடைபெற்றது.

தமிழக விவசாயிகள் கர்நாடக காங்கிரஸ் அரசால் வஞ்சிக்கப்படும் அதே நேரத்தில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியுடன் விருந்து உண்டு கொண்டிருக்கின்றனர். தமிழக விவசாயிகள் மீதான இவர்கள் பற்று இவ்வளவுதான்? தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக, எப்படி கருணாநிதி, ஆட்சியில் இருக்கும்போது காவிரி
ஒப்பந்தத்தைப் புதுப்பிக்காமல் விட்டுவிட்டு, நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தைச் சட்டப் போராட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளினாரோ, அதேபோல தற்போதும், கர்நாடக காங்கிரஸ் ஆட்சியின் தமிழகவிரோத நடவடிக்கைகளை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள், பாதிக்கப்படப் போவது தமிழக விவசாயிகள்தானே.

விவசாயம் பற்றி எதுவுமே தெரியாத முதல்வர் ஸ்டாலினுக்கு எப்படி கவலை இருக்கும்? உங்கள் அனைவருடனும் இணைந்து, இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலக அளவிலான அரசியல் கட்சிகளின் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டிருப்பதால், என்னால் தமிழக பாஜ., சகோதர சகோதரர்களுடன் இணைந்து பங்கேற்க இயலவில்லை. என் எண்ணங்கள் முழுமையாக உங்கள் ஒவ்வொருவருடனும் இருக்கிறது. திமுகவின் தமிழர் விரோதப் போக்கை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.