அருண் ஜெட்லி நினைவு சொற்பொழிவு

அருண் ஜெட்லி நாட்டிற்கு அளித்த விலைமதிப்பில்லா பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அருண் ஜெட்லி நினைவு முதலாவது சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை ஏற்பாடு செய்துள்ளது. டெல்லியின் விக்யான் பவனில் இன்று மாலை நடைபெற உள்ள அருண் ஜெட்லி நினைவு முதலாவது சொற்பொழிவு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். மேலும், ஜூலை 8 முதல் 10ம் தேதி வரை நடைபெற உள்ள “கௌடில்யா பொருளாதார மாநாடு” என்ற மூன்று நாள் நிகழ்ச்சியில் பங்கேற்கவிருக்கும் பிரதிநிதிகள் குழுவினருடனும் பிரதமர் உரையாற்றவிருக்கிறார். ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அன்னே க்ரூஜர், லண்டன் பொருளியல் பள்ளியின் நிக்கோலஸ் ஸ்டெர்ன், ஹார்வர்ட் கென்னடி பள்ளியின் ராபர்ட் லாரன்ஸ், சர்வதேச நிதியத்தின் முன்னாள் மேலாண் இயக்குநர் ஜான் லிப்ஸ்கி, பாரதத்திற்கான உலக வங்கியின் இயக்குநர் ஜுனைத் அகமது உள்ளிட்ட புகழ்பெற்ற பொருளியலாளர்கள் பிரதமரை சந்தித்துப் பேசுவார்கள். நிதியமைச்சகத்தின் ஆதரவோடு, பொருளாதார வளர்ச்சி நிறுவனத்தால் இம்மாநாடு நடத்தப்படுகிறது.