ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்

அக்னிபத் திட்டத்தின் கீழ், ராணுவத்திற்கு அக்னி வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஆள்சேர்ப்பு முகாம், 15, நவம்பர் 2022 முதல் 25, நவம்பர் 2022 வரை வேலூரில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் நடைபெற உள்ளது. தமிழகத்தின் கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கற்பட்டு ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச இளைஞர்கள் இதில் பங்கேற்கலாம். அக்னிவீர் பொதுப்பணி, அக்னிவீர் தொழில்நுட்பப் பணி, எழுத்தர், பண்டகக் காப்பாளர் மற்றும் டிரேட்ஸ்மேன் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பு  மற்றும் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், அவரவர் தகுதிக்கேற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் வாயிலாக  05, ஆகஸ்ட் 2022 முதல்  3, செப்டம்பர் 2022 வரை தங்களது பெயர்களை பதிவு செய்யவேண்டும். இவர்களுக்கான தேர்வு அனுமதிச் சீட்டு 1, நவம்பர் 2022 அன்று வெளியிடப்படும். விண்ணப்பதாரர்களுக்கான தேர்வு தேதி மற்றும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் அனுமதிச் சீட்டில் இடம் பெற்றிருக்கும். மேலும் விளக்கங்கள்பெற ஆள்சேர்ப்பு அலுவலகம் (தலைமையகம்), புனித ஜார்ஜ் கோட்டை வளாகம், சென்னை 600009 என்ற முகவரியிலோ, 044 – 2567 4924 என்ற தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளலாம். தேர்வு நடைமுறைகள் நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் முற்றிலும் தானியங்கி முறையில் மேற்கொள்ளப்படும். எனவே, ஆள்சேர்ப்புக்கு உதவுவதாகவோ அல்லது வேலை வாங்கித் தருவதாகவோ கூறி, மோசடியில் ஈடுபடுவோரை நம்பி விண்ணப்பதாரர்கள் ஏமாந்துவிட வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.