தி.மு.கவுக்கு அண்ணாமலை சவால்

தி.மு.கவினர் சொத்துப் பட்டியலை வெளியிட்ட தமிழக பா..ஜக தலைவர் அண்ணாமலைக்கு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதில், “உங்கள் பேச்சு, குற்றச்சாட்டுகளுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். உங்கள் சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் இணையதளத்தில் விடியோவை நீக்க வேண்டும். இழப்பீட்டுத் தொகையாக ஐந்நூறு கோடி ரூபாய் எங்கள் கட்சிக்காரருக்கு வழங்க வேண்டும். எங்கள் கட்சிக்காரர் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அதை செலுத்த விரும்புகிறார். இந்த அறிவிப்பு கிடைத்து 48 மணி நேரத்துக்குள் இவற்றைச் செய்ய தவறினால், உங்களுக்கு எதிராக சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடங்குவதற்கு எங்கள் கட்சிக்காரர் முன்வருவார்” என்று கூறியிருந்தார்.

இதற்குப் பதிலளித்துள்ள தமிழக பா..ஜக தலைவர் அண்ணாமலை, சட்ட நடவடிக்கைக்கு தான் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். அவரது அறிக்கையில், ” இதற்கு முன்னர் பி.ஜி.ஆர் நிறுவனத்திற்கு முறைகேடாக நிமுக வழங்கிய ஒப்பந்தத்தை வெளிக்கொண்டு வந்ததற்கு 500 கோடி ரூபாய் இழப்பீடு கோரி சட்ட அறிக்கை. திமுக தலைவர்ஸ்டாலின் துபாய் பயணம் குறித்து கேள்வி எழுப்பியதற்காக 100 கோடி இழப்பீடு கோரி சட்ட அறிக்கையைத் தொடர்ந்து மீண்டும் ஒரு முறை என் மீது தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி அவர்கள், 500 கோடிரூபாய் இழப்பீடு கேட்டு சட்ட அறிக்கை அனுப்பியுள்ளார். கோடிகளில் சொத்துக்களை குவித்து வைத்திருக்கும் தி.மு.கவினர் இருக்கும்போது, என்னிடம் மேலும் 500 கோடி ரூபாய் கேட்கிறார்.

தாங்கள் வெளியிட்டுள்ள சட்ட அறிக்கையில், தி.மு.கவினருக்கு சொந்தமான 3,478.18 கோடி ரூபாய் மதிப்பிலான பள்ளிகளும் 34,184.71 கோடி ரூபாய் மதிப்பிலான கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களின் மதிப்பு பொய்யானது என்று தெரிவித்து விட்டு அடுத்த வரியில், ஒருவர் தி.மு.க உறுப்பினர் அல்லது நிர்வாகியாக இருந்தாலும். அவருக்குச் சொந்தமான சொத்துக்கள் மற்றும் நிறுவனங்கள் கட்சியின் சொத்தாக மாறாது என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஒரு புறம் இது தி.மு.க சொத்து இல்லை என்றும், மறுபுறம், வழங்கப்பட்ட தி.மு.கவினரின் சொத்து விவரம் பொய்யென்று கூறுவதற்கு மட்டும் தி.மு.க அமைப்புச் செயலாளருக்கு உரிமை இருக்கிறதா?

தி.மு.க பள்ளி மற்றும் கல்லூரி என்ற தலைப்பின் கீழ் ஒவ்வொரு ஊரிலும் தி.மு.கவினருக்குச் சொந்தமான பள்ளி மற்றும் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களின் விவரங்கள் வழங்கப்பட்டது. உதாரணத்திற்கு, தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகள் நடத்தும் சன்ஷைன் சீனியர் செகண்டரி ஸ்கூல், மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமியின் உறவினர் நடத்தும் தி சென்னை பப்ளிக் ஸ்கூல் அமைச்சர் எ.வ. வேலுவின் மனைவி நடத்தும் ஜீவா வேலு இன்டர்நேஷனல் ஸ்கூல், அருணை பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரி போன்றவற்றை ஒவ்வொருவர் பெயரில் காண்பித்திருக்கிறோம். இவர்கள் அனைவரும் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தை தி.மு.க தலைமையகமான அறிவாலயத்தில் ஒப்படைக்கிறார்கள் என்று தெரிவிக்கவில்லை இரு ஆர் எஸ் பாரதி ஏதாவது குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காக. இப்படி மழுப்புவது போல் தெரிகிறது.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சென்னை மெட்ரோ ரயில் தொடர்பாக நடைபெற்ற ஊழல் குறித்து அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது. அவற்றை சி.பி.ஐயிடம் அளிக்கவுள்ளோம். உங்கள் கட்சியின் தலைவருக்கும். இந்த ஊழலில் தொடர்புடைய அனைவருக்கும் விளக்கம் கேட்டு சம்மன் வரும் வரை, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி பொறுமையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அது மட்டும் அல்லாது முன்னுக்குப் பின் முரணான சில கருத்துக்களை, ஆர்.எஸ். பாரதி தனது தமிழ் சுருக்கத்திலும் ஆங்கில சட்ட அறிக்கையிலும் தெரிவித்துள்ளார்.

ஒன்றில் நோபல் ஸ்டீல் நிறுவனத்திடம் எந்த ஒப்பந்தமும் கையெழுத்து இடப்படவில்லை என்றும் மற்றொன்றில் நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்திற்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். நோபல் புரோமோட்டர்ஸ், நோபல் பிரிக்ஸ் நோபல் ஸ்டீல்ஸ் என்ற நிறுவனங்களில் பஷீர் முகமது என்பவர் இயக்குனராக இருந்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு தி.மு.க அமைப்பு செயலாளர் எதற்காக பதில் அளிக்கிறார்? தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு ஒரு கூடுதல் தகவலையும் தெரிவிக்க விரும்புகிறோம். இதே நோபல் குழுமத்தின் ஒரு நிறுவனமான நோபல் பெரஸ் அண்ட் பவர் லிமிடெட் என்ற நிறுவனத்தில் முனீர் முஹம்மதுடன் தி.மு.க மாநிலங்களவை உறுப்பினரான எம்.எம் அப்துல்லா இயக்குனராக இருந்துள்ளார்.

நோபல் ஸ்டீவ்ஸ் நிறுவனத்துடன் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட செய்தியை நேற்று எனது டுவிட்டர் பக்கத்திலே கேள்வியாக எழுப்பியுளேன். நோபல் பெரஸ் அண்ட் பவர் லிமிடெட் நோபல் புரோமோட்டர்ஸ்ட நோபல் பிரிக்ஸ், நோபல் ஸ்டீல்ஸ் இவை ஒரு குழுமத்தின் வெவ்வேறு நிறுவனங்கள் என்பதும், தி.மு.கவினர் தொடர்புள்ள குழுமமான நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்வதாக அறிவித்திருக்கும் நிதி, யாருடையது என்றும் தமிழக மக்களின் சார்பாக நான் மீண்டும் ஒருமுறை கேள்வி எழுப்புகிறேன். இந்த முறையாவது பதில் அளிப்பீர்களா? நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களை சந்தித்த ஆர்எஸ். பாரதி, ஆருத்ரா நிதி நிறுவனத்திடம் இருந்து 84 கோடி ரூபாய் நான் பெற்றுக்கொண்டதாக ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டை என் மீது சுமத்தியுள்ளார்.

என் மீதும் பா.ஜ.க மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை பொதுவெளியில் வைத்ததற்கு ரூ. 500 கோடி ஒரு ரூபாய் இழப்பீடாகக் கோருகிறேன், இதை நான்  பிரதம மந்திரி குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதிக்கு (பி.எம் கேர்ஸ்) செலுத்த விரும்புகிறேன். 4,400 கோடி ரூபாய் மோசடி செய்த ஹிஜாவு நிதி நிறுவனத்தின் உரிமையாளர்கள் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 19ம் தேதி தமிழக முதல்வரை சந்தித்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் நன்கொடை அளித்த புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் நான் பார்த்தேன். ரூ. 100 கோடி பெற்றுக் கொண்டு இந்த மோசடியில் ஸ்டாலின் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளார் என்று நான் குற்றச்சாட்டு வைக்கலாமா? என்றும் ஆர்.எஸ். பாரதியிடம் கேள்வி எழுப்புகிறேன்.

அடுத்த 48 மணி நேரத்தில் என் மீதும் எனது கட்சியின் மீதும் சுமத்தப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்காவிட்டால் ஆர்.எஸ்.பாரதி மீது தகுந்த வழக்கு தொடுக்கப்படும் என்று மிகப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் நீங்கள் அனுப்பிய சட்ட அறிக்கைக்கு பதிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்தமைக்கு இழப்பீடு கோரும் சட்ட அறிக்கையும் உங்களை விரைவில் வந்து சேரும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.