அ.ம.மு.க போலி மருத்துவர்

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் போலி மருத்துவர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு பல புகார்கள் வந்தன. இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், மருத்துவக் குழுவினர், சாணார்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அய்யாபட்டி பகுதியில் காளியப்பன் என்பவர் தன் வீட்டில் கிளினிக் வைத்து சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் முறையாக மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்து வந்தது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து கிளினிக்குக்கு சீல் வைத்து போலி மருத்துவர் காளியப்பனை கைது செய்தனர். காளியப்பன் அ.ம.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.