கொரோனா குறித்த எய்ம்ஸ் ஆய்வு

நமது பாரதமெங்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது, கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் – வி ஆகிய  3 தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஒரு டோஸ், இரு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும் கொரோனாவால் பாதிக்கப்படுவதாகத் தகவல்கள் வந்தன.இதனைத்தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வுக்கு, 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டும் கொரோனா பாதித்த 36 நோயாளிகளும், ஒரு டோஸ் செலுத்திக்கொண்டும் கொரோனா பாதித்த 27 பேர் என 63 பேர் உட்படுத்தப்பட்டனர். இதில் 10 பேர் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள். மீதம் உள்ளோர் கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்.தடுப்பூசி போடாமல் கொரோனா பாதித்தவர்களைப் போன்றே இவர்களுக்கும் கொரோனா பாதிப்பு வந்தது. பரிசோதனையின் போது வைரஸ் அளவு அதிகமாகவும் காய்ச்சலும் இருந்தது. காய்ச்சல் 5 முதல் 7 நாட்கள் வரை நீடித்தது. உடலில் தடுப்பூசியால் நோய் எதிர்ப்பு பொருள் உருவாகி இருந்தாலும், தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிலருக்கு மற்ற நோயாளிகளைப்போலவே மருத்துவமனையில் சேர்க்கும் நிலை ஏற்பட்டது. ஆனால், யாருக்கும் மரணம் நிகழவில்லை என்று அந்த ஆய்வு நிரூபித்துள்ளது.