ஸ்டிக்கர் ஒட்டிய திட்டத்திலும் குளறுபடி

முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நின்றால் விளம்பரம், நடந்தால் விளம்பரம், சைக்கிள் ஓட்டினால் விளம்பரம் என்று விளம்பர மோகத்துடன் தமிழக மக்களுக்கு விடியலைத் தருவோம் என்று நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து பின்புற வாசல் வழியே ஆட்சியைப் பிடித்த இந்த தி.மு.க. அரசு, ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் அரசு மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் நோயாளிகளின் வீட்டிற்கே சென்று அவர்களுக்கு மாதந்தோறும் மருந்து, மாத்திரைகள் தரப்படும் என்று இத்திட்டத்தை துவக்கும்போது தெரிவித்திருந்தது. மேலும், அரசு மருத்துவமனையில் தங்கள் உடல்நலக் குறைவுக்கு மருந்து உட்கொள்ள விரும்பும் ஒரு கோடி பேரைத் தேர்ந்தெடுக்க இருக்கிறோம், இதற்கு 6 மாத காலம் இலக்கு நிர்ணயித்திருக்கிறோம் என்றும் 2021 ஆகஸ்டில் இந்த அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்தார். ஆனால் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் பல குளறுபடிகள் உள்ளன. பெரும்பாலான நோயாளிகளுக்கு தொடர்ந்து மருந்துப் பொருட்கள் வழங்கப்படுவதில்லை, முதல் தடவை வந்த மருத்துவப் பணியாளர்கள் அதன் பிறகு ஒருநாள்கூட வந்து பார்க்கவில்லை. போட்டோ எடுக்க மட்டும் வந்தார்கள். யாராவது வந்து கேட்டால் அடிக்கடி வருவதால சொல்லச் சொன்னார்கள் என்று மக்கள் கூறியதையும், அத்திட்டத்தில் உள்ள குளறுபடிகளையும் 7.8.2022ல் வெளியிட்டிருந்த அறிக்கையில் எடுத்துரைத்திருந்தேன்.

இந்நிலையில், 29.12.2022 அன்று விடியா அரசின் முதல்வர் ஸ்டாலின், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே ஒன்றாவது பயனாளிக்கு மருத்துவப் பெட்டகத்தை வழங்கியதாக தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டிருந்தது. அப்படி ஒரு கோடி பேருக்குமேல் மருந்துப் பெட்டகங்கள் வழங்கப்பட்டிருந்தால், மருந்துக்காக எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது, என்னென்ன நோய்க்கு எந்த வகையான மருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. ஒரு கோடி பயனாளிகளின் விவரங்கள் குறித்து விசாரித்தபோது, மாநில மருத்துவத் துறை அதிகாரிகள், இத்திட்டத்தின்கீழ் ஒரு கோடி பேருக்கு மேல் மருந்துப் பெட்டகங்கள் கொடுத்ததாக புள்ளி விவரங்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்ததாக நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன.

நோயாளிகள் பற்றிய புள்ளி விவரங்களில் இரண்டு, மூன்று முறை பதிவு செய்யப்பட்டதால், ஒரு கோடி பேருக்குமேல் பயன் பெற்றுள்ளனர் என்றும் மருத்துவத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அ.தி.மு.க ஆட்சியில் செயல்படுத்திய வலி நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு சிகிச்சை என்ற திட்டத்தில், ஒரு வாகனத்தை மட்டும் கூடுதலாக்கி, இந்த அரசு ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற ஸ்டிக்கர் ஒட்டி செயல்படுத்தியுள்ளது. ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள் ஆகியும், முந்தைய ஆட்சியின் மீது குறைகள் சொல்லியே விளம்பர ஆட்சி நடத்தி வரும் இந்த அரசு, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் முழு விவரங்களையும் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என கூறியுள்ளார்.