அக்னி வீரர்களுக்கு விண்ணப்பிக்கலாம்

ராணுவத்துக்கு அக்னி வீரர்கள் தேர்வு செய்யும் முறையில் சமீபத்தில் புதிய மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, வழக்கமாக இறுதியில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வு இனி முதலில் நடத்தப்படும். பின்னர் உடல் தகுதித்தேர்வும் மூன்றாவதாக மருத்துவ பரிசோதனையும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த புதிய முறைப்படி அக்னி வீரர்கள் தேர்வுக்கான அறிவிப்பை ராணுவம் அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், ‘இளநிலை அதிகாரிகள், மற்ற தரவரிசைப் பணிகள், அக்னி வீரர்கள் தேர்வுக்கான மாற்றியமைக்கப்பட்ட நடைமுறை குறித்த அறிவிக்கையை இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. மாற்றியமைக்கப்பட்ட ஆள்தேர்வு நடைமுறையின்படி, ஆள்தேர்வு அணிவகுப்புக்கு முன்பாக கணினி அடிப்படையிலான ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும். பதிவுக்கான அறிவிக்கைகள் www.joinindianarmy.nic.in. இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் வாயிலான பதிவுகளை பிப்ரவரி 16 முதல், மார்ச் 15, 2023 வரை மேற்கொள்ள முடியும். ஆள்தேர்வு 3 கட்டங்களாக நடைபெறும். முதற்கட்டத்தில், அனைத்து விண்ணப்பதாரர்களும் கணினி அடிப்படையிலான ஆன்லைன் பொது நுழைவுத்தேர்வை எதிர்கொள்ள வேண்டும். இரண்டாவது கட்டத்தில், தொடர்புடைய ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் ஏற்பாடு செய்துள்ள இடங்களில் தேர்வு செய்யப்பட்டவர்கள் உடற்தகுதி, உடல் அளவு தேர்வுகளில் கலந்துகொள்ள வேண்டும். மூன்றாவது கட்டத்தில், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனையை எதிர்கொள்ள வேண்டும். கணினி அடிப்படையிலான ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வை ஏப்ரல் 17 முதல், ஏப்ரல் 30, 2023 வரை நாடு முழுவதும் சுமார் 175 முதல் 180 தேர்வு மையங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.