அம்மனுக்கு உகந்த ஆடிப்பூரம்

ஆடி மாதம் என்பது தக்ஷிணாயன காலத்தின் தொடக்க காலம். இதுவரை வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த கதிரவன், தனது தெற்கு நோக்கிய பயணத்தை தொடங்கும் மாதம். நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள். அவர்களது இரவுக்காலமே இந்த தக்ஷிணாயன காலம். உத்தராயண காலம் சிவபெருமானை வழிபட உகந்தது என்றால் தக்ஷிணாயனம் அவரது வாமபாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு உரிய காலம் ஆகும். அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு உகந்த மாதம் ஆடி மாதம்.

இதுவரை பகல் காலம் அதிகமாக வெப்பமாக இருந்த நிலை மாறி இரவு அதிகமாகவும், வெப்பம் குறையும் காலமாகவும் ஆரம்பிப்பதால்தான் ஆடி மாதங்களில் எளிய உணவான கூழ் சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லது என்று உலக நாயகிக்கு கூழ் வார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தினர்  நமது முன்னோர்கள். இந்த ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய் , ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் தந்து அருளுவாள் என்பது அறிந்த விஷயம்.

பூர நட்சத்திரம் நாளில்தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு. உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள். தவிர, சித்தர்களும், யோகிகளும் இந்நாளில் தவத்தை துவக்குவதாக புராணங்கள் கூறுகின்றன. இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடிப்பூர திருநாள், அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள். இந்நன்னாளில், சிவபெருமான் கோயில்களில் இருக்கும் அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் நடத்தப்படும். குழந்தைப்பேறு கிடைக்க வேண்டிக்கொள்ளும் பெண்கள் அந்நாளில் அம்மனுக்கு வளையல்கள் வாங்கிக்கொடுத்து வளைகாப்பு நடத்தித் தங்களது வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்வார்கள். அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு, வளைகாப்பு போன்றவற்றை அன்று நடத்துவார்கள். திருநெல்வேலி காந்திமதியம்மனுக்கு, ஆடிப்பூர விழாவின் நான்காம் நாளன்று, ஊஞ்சல் மண்டபத்தில் நடைபெறும்  வளைகாப்பு விழாவில் பக்தர்களுக்கு வளையல் பிரசாதமாகத் தரப்படும். இந்த வளையலை வாங்கி அணிந்து கொள்ளும் பெண்களுக்கு விரைவில் வளைகாப்பு வைபவம் நடப்பது உறுதி என்பது நம்பிக்கை.

ஆண்டாள் அவதரித்த திருத்தலம் ஸ்ரீவில்லிபுத்தூர் (கோதாதேவி அவதார ஸ்தலம்). அரங்கனுக்குச் சூட்ட வேண்டிய ஆரத்தினை தானே சூடி ஆடியில் அழகு பார்த்தாள். தான் சூடிக்களைந்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால் சூடிக் கொடுத்த சுடர்க்கொடியானாள்.  அப்போது அந்தக் கண்ணாடியில் அரங்கனாகவே அவள் தெரிந்தாள். தானே அவனாக பாவித்து மகிழ்ந்த ஆண்டாளின் அவதார தினம்தான் ஆடிப்பூரத் திருநாள்.

சில இடங்களில் ஆடிப்பூரம் முளைப்பாலிகை திருவிழாவாகவும் கொண்டாடப்படுகின்றன. ஒரு வாரத்திற்கு முன்னரே அவரவர் இல்லங்களில் நவதானியங்களை விதைத்து முளைப்பாலிகையைத் தயார் செய்கின்றனர். அவை அனைத்தும் திருஆடிப்பூரத்தன்று அம்மன் சன்னதியில் சேர்க்கப்படுகின்றன. முளை வளர்ந்துள்ள விதத்தில் இருந்து அவ்வருடம் எவ்வளவு செழிப்பாக இருக்கும் என்பதை உணர்த்துகின்றது என்பது ஐதீகம்.

ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்கு சிறப்பு வழிபாடு நடக்காத கோவில்களே இல்லை எனலாம். இத்திருவிழாவில் கொரோன காரணத்தினால் கடந்த இரண்டு ஆண்டுகளாக  கலந்து கொள்ள முடியாத பலரும் இம்மாதம் தங்கள் ஊர்களுக்குச் சென்று அம்பாள் வழிபாடு சிறப்பாக செய்து வருகிறார்கள்.

ஆர். கிருஷ்ணமூர்த்தி