போதை பொருள் பதுக்கிய நடிகை கைது

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் களக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் அஞ்சு கிருஷ்ணா. இவர் ஒரு சின்னத்திரை நடிகை. இவர் காசர்கோடு பகுதியை சேர்ந்த சமீர் என்பவருடன் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திருக்காக்கரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்துள்ளார். தாங்கள் இருவரும் கணவன் மனைவி என்று கூறிக்கொண்டனர். ஆனால், இவர்களது நடவடிக்கைகள் அக்கம் பக்கத்தினரை சந்தேகம் அடைய செய்தது. மேலும் பல இளைஞர்களும், இளம்பெண்களும் இவர்களது வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றனர். இதனால் அப்பகுதி மக்கள் திருக்காக்கரா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் அங்கு சென்ற காவலர்கள், அஞ்சு கிருஷ்ணா, சமீர் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்தனர். இந்த சோதனையில் 56 கிராம் எடை கொண்ட எம்.டி.எம்.ஏ எனும் ரசாயன போதை பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து கைப்பற்ரினர். இதன் மதிப்பு சுமார் 6 லட்ச ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் போதை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சின்னத்திரை நடிகை அஞ்சு கிருஷ்ணாவை கைது செய்து, எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் முக்கிய நபராக செயல்பட்டு தற்போது தலைமறைவாகிவிட்ட சமீரை வலைவீசி தேடி வருகின்றனர்.