நடிகர் சேத்தன் கைது

கன்னட திரை உலகில் சர்ச்சைக்குரிய நடிகராக இருந்து வருபவர் சேத்தன். பெங்களூரு மைசூரு இடையேயான விரைவுச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்க, கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி மண்டியாவுக்கு வந்தார். பிரதமரின் வருகையையொட்டி அங்கு உரிகவுடா நஞ்சேகவுடாவின் உருவச்சிலைகளை பா.ஜ.கவினர் அமைத்திருந்தனர். அவர்கள் இருவரும் திப்புசுல்தானை கொன்றவர்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் உரிகவுடா, நஞ்சேகவுடா ஆகியோர் குறித்தும் ஹிந்துத்துவா குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் நடிகர் சேத்தன் தனது முகநூல் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். அதில், “ஹிந்துத்துவ அரசியல் என்பது பொய்களால் கட்டமைக்கப்பட்டது. ‘ராவணனை ராமன் தோற்கடித்து அயோத்திக்குத் திரும்பியபோது பாரத தேசத்தை தொடங்கினார்’ என சாவர்க்கர் கூறியது மிகப்பெரிய பொய் ஆகும். பாபர் மசூதியில் ராமர் பிறந்தார் என்பதும் திப்பு சுல்தானை கொன்றவர்கள் ஊரிகவுடா நஞ்சேகவுடா என கூறுவதும் பொய் ஆகும். பொய்களால் கட்டமைக்கப்பட்ட ஹிந்துத்துவ அரசியலை உண்மையால் தோற்கடிக்க முடியும்” என விமர்சித்திருந்தார். இது சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, இந்த சர்ச்சைத் தொடர்பாக பெங்களூருவை சேர்ந்த பஜ்ரங்தள நிர்வாகி சிவக்குமார் பெங்களூரு சேஷாத்திரிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து நடிகர் சேத்தனை கைது செய்தனர். பின்னர் அவரை பெங்களூரு மாநகர அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் நடிகர் சேத்தன் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். நடிகர் சேத்தன் சார்பில் ஜாமீன் கோரி பெங்களூரு நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணையை இன்றைக்கு (வியாழக்கிழமை) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.