இலங்கை தற்காலிக அதிபர்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகக் கோரும் போராட்டம் அந்நாட்டில் தீவிரம் அடைந்துள்ளது. இரு நாட்களுக்கு முன் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கொழும்பு நகரில் உள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு உள்ளே நுழைந்தனர். மக்களைத் தடுக்க முடியாமல் பாதுகாப்புப் படையினர் திணறினர். போராட்டக்காரர்களால் அதிபர் மாளிகை கைப்பற்றப்படுவதற்கு முன்பாகவே அதிபர் கோத்தபய ராஜபக்ச அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடினார். தொடர்ந்து பிரதமர் ரணில் தனிப்பட்ட இல்லத்தை அவர்கள் முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் பிரதமருக்கு சொந்தமான வாகனங்களை அடித்து நொறுக்கியதுடன், வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தினர், வீட்டிக்கு தீ வைத்தனர். இப்படி அடுத்தடுத்து நடந்த பதற்றமான சம்பவங்களை அடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக ஒப்புக்கொண்டார். ஜூலை 13ம் தேதி பதவி விலகுவதாக அவர் கூறினார். ராஜினாமாவை அடுத்து இலங்கையில் அனைத்துக் கட்சி ஆட்சி நடக்கலாம், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவே ஆட்சிக்கு தலைமை தாங்குவார் என கூறப்படுகிறது. மேலும், இலங்கையின் தற்காலிக அதிபராக மகிந்த யாப்பா அபேவர்தனா நியமிக்கப்படுவார். பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசு தேர்வு செய்யப்படும் எனத் தெரிகிறது.