சொத்து ஆவணங்களுடன் ஆதாரை இணைக்க வேண்டும்

வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய், “ஊழல், கருப்பு பணம், பினாமி சொத்து பரிமாற்றத்தைத் தடுக்க, அசையும் மற்றும் அசையா சொத்து ஆவணங்களுடன் ஆதாரை இணைக்க உத்தரவிட வேண்டும்” கோரிக்கை விடுத்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, நீதிபதிகள் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேத்தன் சர்மா, இது மிக முக்கியமான விஷயம் என்றார். அஷ்வினி உபாத்யாய், “ஊழல் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத பினாமி சொத்துகளை பறிமுதல் செய்வது அரசின் கடமை. இதன் மூலம் ஊழல் மற்றும் கருப்பு பணத்துக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்ற தகவல் பொதுமக்களைச் சென்றடையும். அசையும் மற்றும் அசையா சொத்துகள் ஆதாருடன் இணைக்கப்படுவதால் இதைத் தடுக்கலாம். மேலும், இதன்மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேலும் இரண்டு சதவீதம் அதிகரிக்கும். தேர்தலின்போது முக்கிய பங்கு வகிக்கும் கருப்பு பணமும் பினாமி பரிவர்த்தனையும் கிறையும். தேர்தல் நடைமுறைகள் தூய்மையாகும். பணம் கொடுத்து வாக்குகளை வாங்க முடியாத சூழல் ஏற்படும். பதவி பண பலத்தைக்கொண்டி அதிக அளவில் சொத்து குவிப்பதை தடுக்கலாம். பயங்கரவாதம், நக்சலிசம், சூதாட்டம், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை போன்ற பல சட்டவிரோத செயல்களுக்கு கருப்பு பணம் பயன்படுத்தப்படுவதை தடுக்கலாம். மேலும், ஊழல் மற்றும் கருப்பு பணத்தால் அத்தியாவசிய பொருட்கள், நிலம் மற்றும் தங்கம் உள்ளிட்டவற்றின் விலையும் கடுமையாக உயர்கிறது. இதைத் தடுக்க சொத்து ஆவணங்களுடன் ஆதாரை இணைக்க வேண்டும்” என்றார். இதையடுத்து நீதிபதிகள், “இந்த மனு மீது மத்திய அரசின் நிதி, சட்டம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகங்கள் 4 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணை ஜூலை 18ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.