இதய பரிசோதனைக்கு வந்த பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் கை அகற்றம்

இதய பரிசோதனைக்கு வந்த பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையில், அவரது வலது கை அகற்றப்பட்டது. இதற்கு, டாக்டர்களின் கவனக் குறைவான சிகிச்சையே காரணம் என, உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ஜீனாத்; இவரது மனைவி ஜோதி 32, மார்பு வலி காரணமாக, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், இம்மாதம், 15ம் தேதி அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் ரத்த நாள அடைப்பு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்ததால், ‘ஆஞ்சியோ கிராம்’ பரிசோதனை செய்துள்ளனர். அப்போது, நுண்துளை வாயிலாக, ‘ஆஞ்சியோ கிராம்’ செய்ய, வலது கை மற்றும் இரண்டு கால்கள் வாயிலாக முயற்சித்துள்ளனர். ஆனால், ரத்த உறைதல் ஏற்பட்டதால், தொடர்ந்து முயற்சித்து ஆஞ்சியோ கிராம் பரிசோதனை செய்ததில், இதய ரத்தநாள அடைப்புகள் பெரிய அளவில் இல்லை என்பது கண்டறியப்பட்டது.

அதேநேரம், ரத்த உறைதல் காரணமாக, வலது கை மற்றும் இரண்டு கால்கள் மிகவும் மோசமடைந்து கருப்பு நிறத்தில் மாறியுள்ளன. இதனால், அப்பெண்ணின் உயிரை காப்பாற்ற, வலது கையை டாக்டர்கள் நேற்று அகற்றியுள்ளனர்.  தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அங்கு, ‘ஆஞ்சியோ கிராம்’ பரிசோதனைக்கு அதிக கட்டணம் என்பதால், அரசு மருத்துவமனைக்கு வந்தோம்.

அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், இதய ரத்த நாள பாதிப்பு இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர். அதேநேரம், கை, கால்களில் ரத்த உறைதல் என்று கூறி, சதைகளை அறுத்து வைத்துள்ளனர்.

தற்போது, உயிரை காப்பாற்ற வேண்டுமென்றால், வலது கையை உடனடியாக அகற்ற வேண்டும். கால்களில் ரத்தம் சீராகவில்லை என்றால், இடது காலையும் அகற்ற வேண்டியிருக்கும் என, டாக்டர்கள் கூறுகின்றனர். இதய பரிசோதனைக்காக வந்தோம். ஆனால், கை, கால்களை அகற்றுகின்றனர். டாக்டர்கள், தவறான மருந்தையோ அல்லது கவனக்குறைவான சிகிச்சையையோ அளித்துள்ளனர். எங்களுக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இரண்டு மாதங்களுக்கு முன், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்பட்டு, தொடர் சிகிச்சையில் இருந்த வந்த நிலையில், அக்குழந்தை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. ‘தீவிரமாக கண்காணிக்கிறோம்’

இதய நோய் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜோதிக்கு, இரண்டு நாட்கள் மருந்து மற்றும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், ‘ஆஞ்சியோ கிராம்’ பரிசோதனையும் செய்யப்பட்டது. அவரது கையில் வீக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மேற்கொள்ளபட்ட பரிசோதனையில், ரத்த நாள அடைப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய் இல்லாத நிலையில், அவருக்கு ரத்த உறைதல் நோயினால் தான் மாரடைப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. வலது கை ரத்த உறைவினால் செயலிழந்து விட்டதால், முழங்கைக்கு மேல் வரை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. தற்போது, இதயவியல், ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

– தேரணி ராஜன், முதல்வர்,

ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை