ஆ.ராசாவின் பினாமி சொத்துகள் முடக்கம்

முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்ததையடுத்து, அவர் மீது 2015ம் ஆண்டு சி.பி.ஐ வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியது. அப்போது, சென்னை, கோவை, திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆ.ராசாவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அவர்கள், ஆ.ராசா உள்ளிட்ட 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.இதன் அடிப்படையில் அமலாக்கத்துறையும் தனியாக வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்தியது. 2004 முதல் 2007ம் ஆண்டு வரை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக ஆ.ராசா இருந்தபோது, குருகிராமில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதிகளை ஆ.ராசா வழங்கியதும், அதற்காக அந்நிறுவனம் ஆ.ராசாவுக்கு லஞ்சமாக பெரிய தொகையை வழங்கியதும் விசாரணையில் தெரியவந்ததாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இப்படி லஞ்சமாகப் பெற்ற பணத்தை ஆ.ராசா தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரில் தொடங்கிய பினாமி நிறுவனம் மூலம் வருமானமாக கணக்கு காட்டியுள்ளார்.அந்த நிறுவனம் ஆரம்பத்தில் இருந்தே எந்த ஒரு வணிக நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.அந்த நிறுவனத்தில் பெறப்பட்ட முழு பணமும் ரியல் எஸ்டேட் ஒப்பந்தத்தில் இருந்து லஞ்சமாக பெறப்பட்டது என அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.இதன் அடிப்படையில், லஞ்சமாக பெறப்பட்ட பணத்தில் கோவையில் பினாமி பெயரில் ஆ.ராசா வாங்கியுள்ள ரூ.55 கோடி மதிப்புள்ள 45 ஏக்கர் நிலத்தை மத்திய அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.