ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் சீராய்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு முக்கிய மாற்றங்களை கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட்டது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பாரதம், ஜெர்மனி, பிரேசில், ஜப்பான் ஆகிய நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாக சேர்க்க ஆதரவு தெரிவிப்பதாக பிரான்ஸ் நாட்டுக்கான நிரந்தர துணைப் பிரதிநிதி நதாலி பிராட்ஹர்ஸ்ட் தெரிவித்துள்ளார். மேலும், “பாதுகாப்பு கவுன்சில் அதன் அதிகாரத்தையும் செயல்திறனையும் வலுப்படுத்தும் வகையில், உலகம் முழுவதிலுமிருந்து அதிகமான பிரதிநிதிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதன் நிர்வாக மற்றும் செயல்பாட்டுத் தன்மையைப் பாதுகாக்க, விரிவாக்கப்பட்ட கவுன்சில் 25 உறுப்பினர்களை அது கொண்டிருக்கலாம். ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இதில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். சமச்சீரான புவியியல் பிரதிநிதித்துவத்தை அடையும் வகையில் மீதமுள்ள இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். பேரழிவு அட்டூழியங்களை பொறுத்தவரை நிரந்தர உறுப்பு நாடுகள், தங்கள் சிறப்பு அதிகாரத்தை (வீட்டோ) பயன்படுத்துவதை தாங்களாகவே தவிர்க்க வேண்டும்” என்றார். முன்னதாக இந்த விவாதத்தில் பேசிய ஐ.நாவுக்கான இங்கிலாந்து தூதர் பார்பரா உட்வார்ட், “பாரதம், ஜெர்மனி, பிரேசில், ஜப்பான் மற்றும் ஆப்பிரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், அந்த நாடுகளுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை விரிவாக்கம் செய்து மாற்றம் கொண்டுவர வேண்டும்” என்று கூறியிருந்தார்.