பொய் பிரச்சாரத்தை கட்டமைக்கும் கும்பல்

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் தமிழக பா.ஜ.க சிறுபான்மை அணி சார்பில் ‘ரம்ஜான் நோன்பு துறப்பு’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பா.ஜக. மேலிட இணைப் பொறுப்பாளர் சுகாதர் ரெட்டி, மாநிலத் துணைத் தலைவர்கள் கரு. நாகராஜன், பால் கனகராஜ், சிறுபான்மையணி தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் காணொலிகட்சி வாயிலாகப் பங்கேற்று பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “நாம் வெவ்வேறு மதங்களில் பிறந்திருந்தாலும், பாரதத்தினர் என்ற உணர்வில் இணைந்துள்ளோம். அனைத்து மதங்களுக்கும் வெவ்வேறு வழிமுறைகள், சடங்குகள் இருக்கின்றன. ஆனால், நம்மை சகோதரத்துவம் என்ற பந்தம் ஒன்றாகப் பிணைக்கிறது. பா.ஜ.கவில் அதிக அளவில் முஸ்லிம் தொண்டர்கள், நிர்வாகிகள் உள்ளனர். குறிப்பாக, பா.ஜ.க சிறுபான்மை அணி சுறுசுறுப்பாக செயல்படுகிறது. அவர்கள், மிகச் சிறப்பாக கட்சிப் பணியாற்றுகின்றனர். பொய் பிரச்சாரம் செய்பவர்களுக்கு, தக்க பதிலடி கொடுக்கின்றனர். நாம் அனைவரும் இணைந்து கிறிஸ்துமஸ், ரம்ஜான் ஆகியவற்றை கொண்டாடுவததன் காரணம், எந்த வேற்றுமையும் நம்மை பிரிக்கக் கூடாது என்பதற்காகத்தான். பா.ஜ.கவை நேரடியாக எதிர்க்க முடியாதவர்கள், பா.ஜ.க  மற்ற மதங்களுக்கு எதிரானது என்ற பொய் பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர். ஈஸ்டர் தினத்தன்று டெல்லியில் உள்ள ஒரு சர்ச்சில் பிரதமர் சென்று பிரார்த்தனை செய்தார். ரம்ஜான் பண்டிகைக்கு வாழ்த்தும் சொல்கிறார். அனைவரையும் அரவணைத்து, ஒரே பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் பா.ஜ.கவின் நோக்கம்” என கூறினார்.