முற்றுப்புள்ளி அல்ல காற்புள்ளி

விஜயதசமி, 75வது சுதந்திர தினம் ஆகியவற்றை முன்னிட்டு காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ம் தேதி தமிழகம் முழுவதும் 51 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளை விதித்து செப்டம்பர் 28க்குள் அனுமதி தொடரபாக தமிழக அரசு முடிவு எடுக்க உத்தரவிட்டிருந்தது. எனினும், பி.எப்.ஐ தடை, திருமாவளவன் அறிவித்த மனித சங்கிலி உள்ளிட்ட போராட்டங்களால் தமிழகத்தில் சட்டம் அமைதி சீர்குலையும் என்றுகூறி தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலங்களுக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. முன்னதாக, திருவள்ளூரில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி அளிக்காததை எதிர்த்து உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அக்டோபர் 2ம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தடை விதித்ததை ஒப்புக்கொண்டது. அதே சமயம், நவம்பர் 6ம் தேதி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று தமிழக காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, ஆர்.எஸ்.எஸ் தரப்பின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அக்டோபர் 31க்கு தள்ளிவைத்தது.