எந்த தேசத்தில் சனாதன தர்ம அன்பர்களான ஹிந்துக்கள் நிகழ்ச்சி நடத்தினாலும் அதில் அந்த தேசத்தில் வசிக்கும் பாரதியர்களான அனைத்து மொழியினரும், அனைத்து சம்பிரதாயத்தினரும் உற்சாகத்துடன், பக்தியுடன் கலந்து கொண்டு ஹிந்து ஒற்றுமை பரிமளிக்கச் செய்துவிடுகிறார்கள். இதோ சில சமீபத்திய சான்றுகள்:
லண்டன் (இங்கிலாந்து)
இரண்டு நாள் சங்கர ஜெயந்தி விழாவில் சிருங்கேரி சங்கர மடத்தின் சீடர்களும் ‘பாரதிய ஸம்ஸ்கிருதி, சம்பிரதாயம்’ (பி.எஸ்.எஸ்) என்ற அமைப்பினரும் இணைந்து ஆதி சங்கரர் ஜன்ம தினத்தையும் சிருங்கேரி பீடாதிபதி (36வது) பாரதி தீர்த்த ஸ்வாமிகளின் 75வது பீடாரோஹண நன்னாளையும் மரபுப்படி பூஜை, பிரவசனம், புத்தக வெளியீடு, கலை நிகழ்ச்சிகள் என்று லண்டன் ரீடிங் பகுதியில் கோலாகலமாக நடத்திக் காட்டினர்.
கனகதுர்கா கோயிலில் (ஈலிங் பகுதி) சிறப்பாக நடைபெற்ற ராம நவமிக்கு பெரும் திரளாக பாரதியர்கள் வந்திருந்து பங்கு கொண்டனர். பொதுவாக சனி, ஞாயிறுகளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். மூலவரும் உற்சவரும் மிகவும் நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்தனர். 1991 முதல் ஆன்மிகப் பணியில் ஈடுபட்டுள்ளது அன்பர்கள் குழு. சைவ, வைணவ பேதமின்றி பாரத மக்கள் விழா ஏற்பாட்டில் பங்கு கொள்ளுகின்றனர். குறிப்பாக இலங்கை அன்பர்கள் உள்பட பலரும் தன்னார்வலர்களாக கைங்கர்யத்தில் பங்கேற்கிறார்கள்.
யுகாதி தொடங்கி, வெம்ப்ளீ, ஈஸ்ட்ஹாம். ரீடிங், ஸ்லாவ், ஹாரோ என பல இடங்களிலும் அனுமன் வழிபாட்டுடன் நிறைவடையும் விதத்தில் ராம நவமி கொண்டாடப்பட்டது.
’ஸம்ஸ்கிருதி’ கலைக் குழுவினர் புண்ணியத்தில் நடந்த ‘மாத்ரு வந்தனா’ நாட்டிய நிகழ்ச்சி கவனம் கவர்கிறது. லண்டனின் பாரதிய வித்யா பவன் அரங்கில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பரத நாட்டியம், கதகளி, கதக், ஒடிசி, மணிபுரி என்று பாரதம் தரும் பல்வேறு நாட்டிய வடிவங்களும் இடம் பெற்றன. அன்னை பராசக்தியின் கோலங்களான துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி, நவ துர்கை என சிறுமிகள் தொடங்கி பல்வேறு வயதினரும் குழுக்களாக தேவி மாஹாத்மியம் போன்ற புராணங்களில் இருந்து காட்சிகளை நாட்டிய நாடகமாக வழங்கினார்கள்.
அமெரிக்கா
அமெரிக்காவின் கனெக்டிகட் மாவட்டத்தின் நியூ வெண்ட்சர் நகரில் மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் ஒருங்கிணைந்து ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடத்தினர். பல நாட்டவர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் வெற்றி என்பிசி நியூஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பில் வெளிப்பட்டது.
கயானா
மேற்கிந்திய தீவு நாடான கயானாவில், கடற்கரை நகரமான ஸ்பார்ட்டாவில், சுக்லால் குடும்பத்தாரால் பாரதத்திலிருந்து தருவிக்கப்பட்ட 16 அடி உயர அனுமார் சிலை, சீதாராம் ராதே ஸ்யாம் கோயில் வளாகத்தில் மே 18 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது (தகவல்: பாரத தூதரகம்).
ஐக்கிய அமீரகம்
பல பத்தாண்டுகளாக பாரத அன்பர்கள் பஜனை, வேத பாராயணம், அன்னதானம், ராமநவமி, கந்த சஷ்டி என்று துபாயின் ஆஸ்திக சமாஜத்தினர் சமய / ஆன்மிக / பண்பாட்டு சூழலுக்கு ஊட்டமளித்து வருகிறார்கள்.