மீண்டும் பாஜக ஆட்சி அமையும்: முதல்வர் யோகி ஆதித்யநாத்

மக்களவை இறுதி கட்டத் தேர்தலில் வாக்களித்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், “ஜூன் 4-ல் மீண்டும் பாஜக ஆட்சி அமையும்” என்று நம்பிக்கை தெரிவித்தார். நாடு முழுவதும் 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் இறுதி கட்டமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஜூன் 1) காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று காலை கோரக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “இது இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா. இன்று உபி.,யின் 13 தொகுதிகள் உள்பட 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்கள் முன்னால் பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களின் கருத்துகளை முன்வைத்துள்ளன. தேர்தலில் வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடு முழுவதும் எங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பார்க்கும் போது ஜூன் 4 எங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் நாளாக தெரிகிறது. அன்றைய தினம் மீண்டும் மோடி ஆட்சி அமையும்.  பிரதமர் நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக 10 ஆண்டுகள் சேவை செய்துள்ளார். உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை அவர் உயர்த்தியுள்ளார்.
பிரதமரின் தற்போதைய தியானம் தேசத்துக்கானது. ஊழல், முறையற்ற நடத்தைகளில் ஈடுபடுவோருக்கும் அதன் முக்கியத்துவம் புரியாது. அதனைப் புரிந்து கொள்ள இந்தியா மீது, இந்தியாவின் மதிப்பீடுகள் மீது நம்பிக்கை வேண்டும்.” என்றார்.