செவ்வாய் கிரகத்துக்கு மற்றொரு விண்கலம்: லேண்டர், ரோவர், ட்ரோன் கலன்களும் இடம்பெறுகின்றன

செவ்வாய் கிரகத்துக்கு 2-வது முறை அனுப்பப்பட உள்ள விண்கலத்தில் லேண்டர், ரோவர், ட்ரோன் ஆகிய கலன்கள் இடம்பெற உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலர் கூறியதாவது: செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் 8 ஆண்டுகளாக அந்த கோளை சுற்றிவந்து சிறப்பாக ஆய்வு செய்தது. அதில் பல்வேறு அரிய தகவல்கள் நமக்கு கிடைக்கப் பெற்றன. இதன் ஆயுட்காலம் முடிந்ததை அடுத்து தற்போது மங்கள்யான்-2 திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த முறை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படும் விண்கலத்தில் தரையிறங்கி ஆய்வு செய்யும் விதமாக லேண்டரும் இடம்பெறும். அதனுடன் ரோவர் மற்றும் ரோட்டோகாப்டர் (ட்ரோன்) கலன்களும் சேர்த்து அனுப்பப்பட உள்ளன.
இதில் ரோவர் வாகனம் தரையில் ஊர்ந்தபடியும், ட்ரோன் பறந்து சென்றவாறும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. நாசாவின் இன்ஜெனியூட்டி ட்ரோன் போன்றே நமது ரோட்டோகாப்டர் வடிவமைக்கப்பட உள்ளது. இதில் காற்றில்ஈரப்பதம், வெப்பநிலை, அழுத்தம், தூசிகளின் தன்மை, உயிரினங்கள் சுவடு என செவ்வாய் கோளின் தட்பவெப்ப சூழலை உன்னிப்பாக கவனிக்கும் விதத்திலான சென்சார்கள் இடம்பெறும்.
இந்த ட்ரோன் அதிகபட்சமாக 100 மீட்டர் உயரம் வரை பறக்கும் விதத்தில் தயாரிக்கப்பட இருக்கிறது. இதன்மூலம் கிடைக்கப் பெறும் தரவுகள் அறிவியல் ஆய்வுக்கும், எதிர்கால திட்டங்களுக்கும் உதவிகரமாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.