சென்னை | வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் பாஜக நிர்வாகி மீது தாக்குதல்: திமுகவினர் மீது போலீஸில் புகார்

தமிழகம் முழுவதும் கடந்த 25, 26 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பல்வேறு கட்சியினர் ஆங்காங்கே அமர்ந்து, வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த வகையில், சென்னை திருவல்லிக்கேணி அயோத்தி நகரில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் பாஜக நிர்வாகிகள் சுமன், கமலக்கண்ணன், மணிகண்டன், செந்தில் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த திமுகவினருக்கும், பாஜகவினருக்கும் இடையேவாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

அப்போது பாஜக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதில் திருவல்லிக்கேணி அயோத்தி நகரை சேர்ந்த பாஜக மண்டல துணைத் தலைவர் சுமன்(49) என்பவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து மெரினா கடற்கரை காவல் நிலையத்தில் சுமன் புகார் அளித்துள்ளார். மேலும், மாவட்ட தலைவர் விஜய்ஆனந்த் சென்னை காவல் ஆணையர்அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாஜக இன்று ஆர்ப்பாட்டம்: இந்நிலையில், தாக்குதல் சம்பவத்தை கண்டித்து திருவல்லிக்கேணியில் இன்று மாலை 4 மணிக்குபாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இதில் கட்சியின் மாநிலதுணைத் தலைவர் கரு நாகராஜன், மாநில செயலாளர்கள் வினோஜ் பி.செல்வம், சதீஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்க உள்ளனர்.