பச்சை பாக்கெட் பால் நிறுத்தம்: அண்ணாமலை கண்டனம்

ஆவின் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்த முடிவெடுத்திருப்பது, மக்களை ஏமாற்றும் செயல்’ என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில், 14.75 லட்சம் லிட்டர் விற்பனையாகும் ஆவின் பாலில், 40 சதவீத பங்குள்ள, 4.5 சதவீதம் கொழுப்பு சத்துள்ள பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்தி விட்டு, 3.5 சதவீத கொழுப்பு சத்துள்ள ஊதா நிற பாக்கெட் பால் விற்பனையை செய்ய முடிவெடுத்திருப்பது, மக்களை ஏமாற்றும் செயல்.

ஏற்கனவே, 6 சதவீத கொழுப்பு சத்து இருக்க வேண்டிய ஆரஞ்சு நிற பாக்கெட் பாலில், 4.79 சதவீதம் கொழுப்பு சத்துதான் உள்ளதாக, உணவு பாதுகாப்பு ஆணையம் அங்கீகரித்த பரிசோதனை கூட்டத்தில், தமிழக பா.ஜ., மேற்கொண்ட ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது.

இந்த சோதனை அறிக்கையை, அமைச்சரின் பரிசீலனைக்காக இணைத்திருக்கிறோம். இவ்வாறு, கொழுப்பு சத்துக்களை குறைத்து, ஆவின் நிறுவனத்தின் பாலை நம்பி இருக்கும் குழந்தைகளின் வளர்ச்சியில் வேண்டுமென்று விளையாடுகிறது, ஊழல் தி.மு.க., அரசு. மேலும், பாலில் கொழுப்பு சத்தை குறைத்து விட்டு, விலையை குறைக்காமல் தொடர்ந்து பொது மக்களை மோசடி செய்து வருவதை. தி.மு.க., அரசு நிறுத்த வேண்டும். பொது மக்கள் கொடுக்கும் விலைக்கு, தரமான ஆவின் பாலை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.