வாகன வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

வாகனங்கள் மீதான வரி உயர்வு அறிவித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமாகா தலைவர் ஜி.கே.வாசன், வாகனங்களுக்கான வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை அமைச்சர் வாகனங்களுக்கான வரி உயர்வை அறிவித்திருக்கிறார். தமிழக அரசின் நிதி நிலையை உயர்த்துவதற்காக, வரியை உயர்த்துவது சரியானதாக இருந்தாலும்கூட அதிலும் ஒரு நியாயம் இருக்க வேண்டும். இந்த வரி உயர்வால் ஏழை, எளிய மக்கள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுவார்கள்.

சரக்கு வாகனம், வாடகை வாகனம், பயணிகள் போக்குவரத்து வாகனங்களுக்கு வரி உயர்த்துவதால் அந்த உயர்வு மக்களின் தலையில் மேலும் ஒரு சுமையாக சேரும். சரக்கு மற்றும் வாடகை வாகனங்களுக்கு வரியை உயர்த்தும்போது அந்த வரி உயர்வை பலமடங்காக வாகனத்தின் வாடகையிலும், வியாபாரிகள் பொருள்களின் மீதும் விலையை உயர்த்துவார்கள். இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அதேபோல இருசக்கர வாகனங்களுக்கு வரியை உயர்த்துவது சரியான முடிவல்ல. இவ்வாறு அனைத்து வகை வாகனங்களுக்கும் வரியை உயர்த்தும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சகம், மாநில சாலைகளை முறையாக பராமரிக்கிறதா என்றால் இல்லை. எனவே தமிழக அரசும், போக்குவரத்து துறையும் மக்களின் நலன் கருதி வாகனங்கள் வரி உயர்வை மறுபரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும்.