செம்பரம்பாக்கம் ஏரியில் 100 கன அடி உபரிநீர் திறப்பு: பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம் 23 அடி. மொத்த கொள்ளளவு 3,132மில்லியன் கன அடி. தொடர் மழைகாரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்றைய நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22.05 அடியாகவும், நீர்வரத்து 393 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 138 கன அடியாகவும் இருந்தது. முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியிலிருந்து முதற்கட்டமாக 100 கன அடி நீரைத் திறந்து விடமுடிவு செய்யப்பட்டது. அதற்காக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் அங்கு வசிக்கக் கூடிய பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

இந்நிலையில் சிறு – குறு மற்றும்நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் பூஜை செய்து உபரி நீரைத் திறந்துவிட்டனர்.

செம்பரம்பாக்கம் ஏரியின் 19 கண் மதகுகளில் 8, 10, 12 ஆகிய மதகுகளின் 3 ஷெட்டர்களின் வழியாக 100 கன அடி உபரிநீர் திறந்துவிடப்பட்டது. தொடர் மழை மற்றும் நீர்வரத்தால்ஏரியின் நீர்மட்டம் உயரும் பட்சத்தில் உபரிநீர் வெளியேற்றப்படுவது, மேலும் அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.