கோவில்களை ஆக்கிரமித்துள்ள தமிழக அரசு தெலுங்கானா பிரசார கூட்டத்தில் மோடி பேச்சு

”தமிழகத்தில் உள்ள ஹிந்து கோவில்களை தி.மு.க., அரசு கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளது. கோவில் சொத்துக்கள் மற்றும் வருமானங்களை முறைகேடாக பயன்படுத்துகிறது. இது தொடர்பாக தன் கூட்டணி கட்சியான தி.மு.க.,வை காங்கிரஸ் தட்டிக் கேட்குமா?” என, பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பினார்.

தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் பாரத் ராஷ்ட்ர சமிதி ஆட்சி நடக்கிறது. மாநில சட்டசபைக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், அங்கு பல்வேறு வளர்ச்சிப் பணிகளை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து நிஜாமாபாதில் நடந்த பா.ஜ., பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ் கூறுகிறது. அந்தக் கணக்கெடுப்பின் அடிப்படையில், அதிகளவில் உள்ள ஜாதியினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும் கூறுகிறது. தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழகத்தில் ஹிந்துக்களுக்கு சொந்தமான வழிபாட்டு தலங்களை மாநில அரசு தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. அதுபோல, சிறுபான்மையினருக்கு சொந்தமான வழிபாட்டு தலங்களை தங்களுடைய கட்டுப்பாட்டில் இந்த மாநில அரசுகள் கொண்டு வருமா? நிச்சயம் செய்ய மாட்டார்கள்.

தமிழகத்தில் ஹிந்து கோவில்களை மாநில அரசு ஆக்கிரமித்துள்ளது. கோவில்களின் சொத்துக்கள் மற்றும் வருமானங்களை முறைகேடாக பயன்படுத்துகிறது.

எவ்வளவு மக்கள்தொகையோ அதற்கேற்ற உரிமை என்று கூறும் காங்கிரஸ், தமிழகத்தில் உள்ள தன் கூட்டணி கட்சியான தி.மு.க.,விடம், கோவில்களை ஹிந்து மக்களிடம் ஒப்படைக்கும்படி கூறுமா? சிறுபான்மையினர் வழிபாட்டு தலங்களை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வராதபோது, கோவில்களை மட்டும் எப்படி அரசு எடுத்துக் கொள்ள முடியும்? மக்கள்தொகைக்கு ஏற்ப உரிமை தர வேண்டும் என்று கூறும் காங்கிரஸ், கோவில்களை ஹிந்துக்களிடம் அளித்து, அவர்களுடைய உரிமையை நிலைநாட்டுமா?

 

பா.ஜ.,வை பொருத்தவரை, ஜாதி, மதம் என்ற அடிப்படையில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில்லை. எந்த ஜாதியாக இருந்தாலும், எந்த மதமாக இருந்தாலும், ஏழ்மையில் இருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும் என்பது தான், இந்த அரசின் நோக்கமாகும். அதை செய்வதையே எங்களுடைய கடமையாக கருதுகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டணியில் சேர விரும்பினார்

நிஜாமாபாதில் நடந்த கூட்டத்தில், பிரதமர் மோடி மேலும் பேசியதாவது:ஹைதராபாத் மாநகராட்சிக்கு, 2020ல் தேர்தல் நடந்தது. அதற்கு முன்பெல்லாம், நான் இங்கு வரும்போது, முதல்வர் சந்திரசேகர ராவ் என்னை விமான நிலையத்தில் வரவேற்பார்; என் மீதும் அன்பும், மரியாதையும் காட்டுவார். தேர்தலுக்குப் பின், புதுடில்லியில் என்னை சந்திக்க வந்தார். வழக்கத்துக்கு மாறாக மிகவும் கனிவுடனும், மரியாதையுடனும் பேசினார். பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தங்கள் கட்சியை சேர்த்துக் கொள்ளும்படி கேட்டார்.’உங்களுடைய செயல்கள் எங்களுடைய கொள்கைகளுக்கு சரி வராது. அதனால், உங்களுடன் மோடி சேர முடியாது’ என்றேன். ஹைதராபாத் மாநகராட்சியில் எதிர்க்கட்சியாக அமர்ந்தாலும் பரவாயில்லை என, அவருடைய கோரிக்கையை நிராகரித்தேன்.கொள்ளையடிப்பது தான், பாரத் ராஷ்ட்ர சமிதியின் கொள்கை. தெலுங்கானாவில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு நிதி அளித்துள்ளது. ஆனால், அவற்றை கொள்ளைஅடித்துள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.