ஊழல் மலிந்து காணப்படும் கல்வித் துறை: உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் குற்றச்சாட்டு

அரசு உதவி பெறும் பள்ளிகளின் உரிமை மீட்பு மாநாடு நேற்று திருச்சியில் நடைபெற்றது. புனித வளனார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி கழக முன்னாள் செயலாளர் போஸ்கோ, மேலப்பாளையம் முஸ்லிம் கல்விக் குழுமம் எல்.கே.எஸ்.முகமது மீராமைதீன், இந்து பள்ளி நிர்வாகிகள் கூட்டமைப்பு துணைத் தலைவர் டி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் த.கனகராஜ் வரவேற்றார். மாநாட்டில், எம்எல்ஏக்கள் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, நாகை மாலி, ஜெ.ஜி.பிரின்ஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

சென்னை உயர் நீதிமன்றமுன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன் பேசியது: அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் மற்றும் உதவிகளால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இன்று ஏழை மாணவர் கள் கூட கல்வி கற்கதனியார் பள்ளிகளை நாடிச்செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மாணவர்கள் எங்கு படிக்க வேண்டும் என்பதை கல்வி வியாபாரிகள் தீர்மானிக்கின்றனர்.

எந்தவித பிரச்சினையும் இல்லாமல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சரிவு ஏற்படாது. புதிய கல்வி வியாபாரிகள்தான் அரசாங்கத்தை நடத்தக் கூடியவர்களாக இருக்கின்றனர். அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு 2001-ம் ஆண்டுக்கு பிறகு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளே அழிவுக்கு காரணமாக உள்ளது. ஊழல் மலிந்து காணப்படும் துறையாக கல்வித்துறை உள்ளது என்றார்.

மாநாட்டில், அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி வரும் உயர்கல்வியில் இடஒதுக்கீடு மற்றும் திட்டங்களை அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுப்படுத்த வேண்டும் என்பதுஉள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.