மத்திய அரசு நிதியில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள மருத்துவமனை

சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் மத்திய அரசின் நிதியில் `தேசிய முதியோர் நல மருத்துவமனை’ கட்டுமானப் பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டன. அடுத்த சில ஆண்டுகளில் பணிகள் நிறைவடைந்தன. 2020-ம் ஆண்டு கரோனா பெருந்தொற்று ஏற்பட்டதால், தேசிய முதியோர் நல மருத்துவமனை, அரசு கரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டது. கரோனா தொற்று கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்துகடந்த 2022-ம் ஆண்டு மேமாதம் கரோனா மருத்துவமனை செயல்பாட்டில் இருந்துவிடுவிக்கப்பட்டது. புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சில மாதங்களில் தேசிய முதியோர் நல மருத்துவமனை திறக்கப்படு மெனத் தமிழக அரசு அறிவித்தது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களை நியமிக்குமாறு தமிழக அரசுக்கு அறிவுறுத்திய மத்திய அரசு 2 ஆண்டுகளுக்கான பணியாளர் ஊதியத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்தது. நீண்டகால ஊதியத்துக்கான நிதிஒதுக்கீடு வழங்க வேண்டுமென மத்திய அரசுக்குத் தமிழகஅரசு கோரிக்கை வைத்தது.

இதற்கிடையில், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செயல்படும் முதியோர் நல மருத்துவத் துறை, கிண்டி தேசிய முதியோர் நல மருத்துவமனைக்கு மாற்றநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2 தலைமை மருத்துவர்கள் உட்பட மொத்தம் 6 மருத்துவர்கள் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்து தேசிய முதியோர்நல மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளனர். ஆனால், அதற்கான நடவடிக்கை களிலும் நிர்வாக சிக்கல்கள் எழுந்துள்ளதால், மருத்துவமனையைத் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு மருத்துவர்களிடம் கேட்ட போது, “சென்னையில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள்வசிக்கின்றனர். மகளிர் நலன் மருத்துவமனை, குழந்தைகள் நல மருத்துவமனை ஆகியவை தனித்தனியே உள்ளதைப் போன்று முதியோர் நல மருத்துவமனையும் தனியாக இருக்க வேண்டும். தேசிய முதியோர் நல மருத்துவமனையில் வயதான நோயாளிகளுக்கான அனைத்து வசதிகளும், சிகிச்சை கட்டமைப்புகளும் இருக்கின்றன.

கிண்டியில் அடிக்கல் நாட்டப்பட்டு 15 மாதங்களில் கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடும், மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனங் கள் அதிவிரைவாக நடந்தன. ஆனால், கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் முதியோர் நல மருத்துவமனை இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. ஏழை மக்களுக்கான சிகிச் சையில் மத்திய அரசோ, மாநில அரசோ அரசியல் செய்யக் கூடாது. அதனால், விரைவாக தேசிய முதியோர் நல மருத்துவமனையைத் திறந்து வயதான ஏழைநோயாளிகளின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும்” என்றனர்.