அ.தி.மு.க, முன்னாள் எம்.எல்.ஏ., காருக்கு தீ வைத்த தி.மு.க., நிர்வாகி

கோவிலில் முதல் மரியாதை யாருக்கு என்பதில் ஏற்பட்ட பிரச்னையில், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., பொன்னம்பலம் காருக்கு தீ வைத்ததாக, தி.மு.க., கிளைச்செயலர் வேல்முருகனிடம் போலீசார் விசாரிக்கின்றனர். மதுரை மாவட்டம், சத்திரப்பட்டி அருகே கருவனுாரைச் சேர்ந்த பொன்னம்பலம், சமயநல்லுார் தொகுதி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். அதே ஊரில் தி.மு.க., கிளை செயலராக இருப்பவர் வேல்முருகன்.

ஊரிலுள்ள பாறை கருப்பு சுவாமி கோவிலில் சமீபத்தில் திருவிழா நடந்தது. இதில், ஒவ்வொரு தரப்பினருக்கும் முதல் மரியாதை செய்யப்பட்டது. இதில், பொன்னம்பலத்திற்கும், வேல்முருகனுக்கும் தகராறு ஏற்பட்டது. போலீசார் சமரசம் செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை கருவனுார் காலனி தெருவிலுள்ள பொன்னம்பலம் வீட்டை சிலர் அடித்து நொறுக்கினர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த காருக்கு தீ வைத்ததுடன், டூ – வீலர், பொருட்களை சூறையாடினர். இதில், பொன்னம்பலம் தரப்பைச் சேர்ந்த ஐந்து பேர் படுகாயமடைந்தனர். பொன்னம்பலம் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து, வேல்முருகன், அவரது ஆதரவாளர்கள் ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வேல்முருகனை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்; மற்றவர்களை தேடி வருகின்றனர். ஊரில் பதற்றம் நிலவி வருவதால், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.