டிஜிட்டல் மயத்தால் இந்தியாவில் புரட்சிகரமான மாற்றம்

டிஜிட்டல் மயத்தால் இந்தியாவில் புரட்சிகரமான மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் ஜி -20 மாநாடுகள், கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. இந்த வரிசையில் உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் ஜி-20 அமைப்பின் மாநாடு கடந்த 11-ம் தேதி தொடங்கியது. இதன் நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

ஜனநாயகத்தின் தாயாக விளங்கும் இந்தியாவின் மிகப் பழமையான வாரணாசி எனும் காசி நகரில் மாநாடு நடந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஞானம். விவாதம், கலாச்சாரம், ஆன்மிகத்தின் மையமாக இந்த நகரம் திகழ்கிறது. நாட்டின் அனைத்து பகுதி மக்களையும் காசி ஒன்றிணைக்கிறது. காசி மாநாட்டுக்கு வருகை தந்த ஜி20 உறுப்பு நாடுகளின் அமைச்சர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்.

கரோனா பெருந்தொற்று காரணமாக உலகின் தெற்கு பகுதி நாடுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன. உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சர்வதேச அளவில் உணவு, எரிபொருள். உரம் ஆகியவற்றுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது.

நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால் மாற்றங்களை ஏற்படுத்தலாம். நமது செயல்பாடுகள் நேர்மையாக இருக்க வேண்டும். நமது முயற்சிகள் அனைவருக்கும் பலன் அளிப்பதாக இருக்க வேண்டும். நீடித்த வளர்ச்சி இலக்குகளை எட்ட முதலீடுகள் அவசியம். இதற்கு ஏற்ற வகையில் பன்னாட்டு நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் தேவைஉள்ள நாடுகளுக்கு கடன் கிடைக்கஏற்பாடு செய்ய வேண்டும். பல நாடுகள்எதிர்கொள்ளும் நிதி சார்ந்த பிரச்சினைகளுக்கு ஒன்றிணைந்து தீர்வு காண வேண்டும்.

மாவட்ட வளர்ச்சிக்கான திட்டம்: இந்தியாவில் முன்னேறத் துடிக்கும் மாவட்டங்கள் என்ற திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது. இதன்படி,100-க்கும் மேற்பட்ட பின்தங்கிய மாவட்டங்களில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த மாவட்டங்கள் இப்போது நாட்டின் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக மாறியுள்ளன. ஜி – 20 உறுப்பு நாடுகளின் மேம்பாட்டு அமைச்சர்கள், முன்னேறத் துடிக்கும் மாவட்டங்கள் திட்டத்தை ஆய்வு செய்து அவரவர் நாடுகளில் இந்த திட்டத்தை செயல்படுத்தலாம்.

‘தரவு இடைவெளி’ என்பது சர்வதேச பிரச்சினையாக உருவெடுத்து உள்ளது. இதை எதிர்கொள்ள ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தொழில்நுட்பங்களை பரஸ்பரம் பகிர்ந்துகொண்டால் தரவு இடைவெளி பிரச்சினைக்கு எளிதாக தீர்வு காண முடியும்.

டிஜிட்டல் மயத்தால் இந்தியாவில் புரட்சிகரமான மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. தொழில்நுட்பத்தின் உதவியால் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறோம். எங்களது அனுபவங்களை நட்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம்.

பெண்களுக்கு அதிகாரம்: இந்தியாவில் நதிகள், மரங்கள், மலைகள் மற்றும் இயற்கையின் அனைத்துஅம்சங்களுக்கும் மரியாதை செலுத்தி வருகிறோம். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வாழ்க்கை முறைகளைப் பின்பற்றி வருகிறோம். கடந்த ஆண்டு ஐ.நா. பொதுச் செயலாளருடன் இணைந்து லைப் இயக்கத்தை தொடங்கி வைத்தேன். இதன்மூலம் பருவநிலை மாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வளர்ச்சி இலக்குகளை எட்ட பாலின சமத்துவம், மகளிர் அதிகாரமளித்தல் அவசியம். இந்தியாவில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதுடன் நின்றுவிடவில்லை. அதையும் தாண்டி பெண்கள் தலைமைக்குமுன்னுரிமை அளித்து வருகிறோம். இந்தியாவில் வளர்ச்சி மற்றும் மாற்றத்துக்கான முகவர்களாக பெண்கள் திகழ்கின்றனர். பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கான செயல் திட்டத்தை ஜி-20அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளும் பின்பற்ற வேண்டும்.

மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள் புனித காசி நகரை சுற்றிப் பார்க்க வேண்டுகிறேன். அப்போதுதான் காசியின் எழுச்சியை உணர முடியும். இது என்தொகுதி என்பதால் உரிமையுடன் கூறுகிறேன். கங்கை ஆரத்தியை கண்டுகளியுங்கள். சாரநாத்தையும் பார்வையிடுங்கள். இவை புதிய அனுபவத்தை தரும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.