`டாஸ்மாக்` உயிர் பலி; அண்ணாமலை கண்டனம்

தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனைக்கு பல உயிர்கள் பலியான சில தினங்களிலேயே, மதுக் கடைகள் திறக்கும் நேரத்திற்கு முன் மதுபானக் கூடத்தில் சட்ட விரோதமாக விற்கப்பட்ட மதுவை அருந்தியதில் இருவர் உயிரிழந்தனர்.

‘சயனைடு கலந்திருந்த மதுவை அருந்தியதால் மரணம்’ என்று அந்த வழக்கை, விசாரிக்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அப்படியே கைவிட்டது தமிழக அரசு. பல மாவட்டங்களில் மதுபானக் கூடங்கள், சட்ட விரோதமாக இயங்கி வந்திருக்கின்றன என்பது தற்போது தான் தெரிய வந்துள்ளது. சில தினங்களுக்கு முன், மது பாட்டிலுக்குள் இறந்த நிலையில் பல்லி கிடந்ததாகவும், தற்போது, பாசி மிதப்பதாகவும் செய்தி வந்து உள்ளது.

அவற்றை அடுத்து, மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் விதமாக மதுரை மாவட்டத்தில், டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்த இருவர் மயக்கம் அடைந்த நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருக்கிறார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார்.

தெருவுக்கு தெரு மதுக் கடைகள் திறந்து வைத்ததன் விளைவாக, 16 வயது பள்ளி மாணவி ஒருவர், தந்தையின் குடிப்பழக்கத்தைக் கண்டு, வேதனை அடைந்து தற்கொலை செய்துள்ளார்.

இவற்றை பற்றி கவலைப்படாத தி.மு.க., மது ஆலைகள் நடத்தும் தங்கள் கட்சிக்காரர்களும், துறை அமைச்சரும் சம்பாதிக்க, ஏழை மக்களை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறது.

கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க திறனில்லாத தி.மு.க., அரசு, தற்போது மதுக் கடைகளில் விற்கப்படும் மதுவால் தொடர்ந்து ஏற்படும் உயிர் பலிகளை என்ன சொல்லி சமாளிக்க போகிறது என்று அண்ணாமலை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.