தூக்கில் தொங்கவும் தயார்

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் புகார் கூறி, கடந்த ஒரு மாதமாக டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், விக்னேஷ் போகத், வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 28ம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட்டவுடன், ஜந்தர் மந்தரில் இருந்து தடையை மீறி நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் சென்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்தி தடுப்புக் காவலில் வைத்த டெல்லி காவல்துறை அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தது. ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி மறுத்துள்ளது. இந்த சூழலில், குற்றச்சாட்டு குறித்து பிரிஜ் பூஷண் பேசுகையில், “என் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தூக்கில் கூட தொங்க தயார். உங்களிடம் ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் சமர்பியுங்கள். நான் தண்டனை பெறத் தயாராக இருக்கிறேன்” என தெரிவித்தார். முன்னதாக அவர் உண்மை கண்டறியும் சோதனைக்குத் தயார் என கூறியிருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது. இதனிடையே பாலியல் புகாரில் பிரிஜ் பூஷணுக்கு எதிராக ஆதாரம் இல்லை, பாலியல் புகாரில் 15 நாட்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும். சாட்சியங்களை கலைக்க் பிரிஷ் பூஷன் முயற்சித்தாக கூறப்படும் குற்றச்சாட்டிலும் உண்மையில்லை என டெல்லி காவல்துறை தனது விசாரணையின் முன்னேற்றம் குறித்து தெரிவித்துள்ளது.