இரு நிறுவனங்களுக்கு உள்ள தொடர்பு என்ன?

கல்லல் குழும நிறுவனத்தில் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த நிறுவனம் முதலீடு செய்திருந்தது. இந்நிலையில், போலி ஆவணங்கள் மூலம் போர்ச்சுக்கல் நாட்டைசேர்ந்த நிறுவனத்தை கல்லல் நிறுவனம் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், அந்நிறுவனத்தில் இயக்குநர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அந்த நிறுவனத்துடன் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக லைகா நிறுவனம், உதயநிதி ஸ்டாலின் ஃபவுண்டேஷன் சொத்துகள் மற்றும் வங்கி கணக்கில் இருந்த இருப்பு தொகையையும் அமலாக்கத்துறை சமீபத்தில் முடக்கியுள்ளது. இந்நிலையில், ஒரே முகவரியில் உதயநிதி ஸ்டாலின் ஃபவுண்டேஷன் மற்றும் நோபல் ப்ரிக்ஸ் என்ற நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த இரு நிறுவனங்களுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்ற கேள்வியை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தி.மு.க ஃபைல்ஸ் வெளியிட்ட போது நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் 1,000 கோடி ரூபாய் முதலீடு குறித்த கேள்வியை எழுப்பியிருந்தோம். முதலீடும் வரவில்லை முறைகேடான முதலீடு என்று எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கு இன்று வரை பதிலும் வரவில்லை. முறைகேடான பணப்பரிவர்த்தனை மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை அமலாக்கத் துறையிடம் சிக்கியுள்ளது. நோபல் ப்ரிக்ஸ் நிறுவனம் இயங்கி வந்த அதே விலாசத்தில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த இரு நிறுவனங்களுக்கு உள்ள தொடர்பு என்ன? இதற்காவது பதில் வருமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.